மட்டக்களப்பு: எமது மகனின் கொலையை மறைப்பதற்கு காவல்துறையினர் முயற்சி- பாலசுந்தரத்தின் பெற்றோர்

கொலையை மறைப்பதற்கு காவல்துறையினர்

எமது மகனின் கொலையை மறைப்பதற்கு காவல்துறையினர் முயற்சி செய்வதாக பாலசுந்தரத்தின் பெற்றோர் தெரிவித்தனர். இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனது வீட்டு வாசற் தளத்துக்கு முன்பாக கடந்த ஆறாம் மாதம் மூன்றாம் திகதி இடம் பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த பாலசுந்தரத்தின் வழக்கு இன்று எடுத்துக் கொள்ளப்பட்டது. 

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி.ரிஸ்வான் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்ட இந்த வழக்கு, இம்மாதம் 21ம் திகதி வரை சந்தேக நபரை விளக்கறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த வழக்கு தொடர்பாக  உயிரிழந்த பாலசுந்தரத்தின் பெற்றோர் ஊடகங்களுக்கு  கருத்து தெரிவிக்கையில்,

மட்டக்களப்பு காவல்துறைப் பிரிவில் இடம்பெற்ற படுகொலை சம்பவத்தினை ஏராவூர்  காவல்துறையினர்  விசாரணை செய்து அறிக்கைகள் வழங்கப்படாத காரணத்தினால் மீண்டும் குறித்த துப்பாக்கிச்சூடு விசாரணையை கரடியனாறு காவல்துறையினருக்கு மாற்றப்பட்டுள்து. இதன் காரணமாக நாங்கள் அலைந்து திரிகின்றோம்.

மேலும் இன்றைய தினம் கௌரவ நீதிபதி அவர்கள் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்த இடத்தில் எந்த துப்பாக்கி பயன்படுத்தப்பட்டது என்று காவல்துறையினரிடம் வினவியபோது  அது குறித்து தமக்குத் தெரியாதென அவர்கள்  தெரிவித்துள்ளனர்.

இது மிகவும் வேதனை அளிப்பதாகவும் தங்களது மகனது கொலைக்கான நீதியை மறைப்பதற்கு  காவல்துறையினர் ,ஈடுபடுகின்றனர்.

எது எவ்வாறாக இருந்தாலும் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட இன்று 7 மாதங்கள் கடந்த நிலையிலும் இதுவரைக்கும் எந்த விதமான அறிக்கைகளும் காவல் துறையினரால் மன்றுக்கு சமர்ப்பிக்கப்படவில்லை என கண்ணீருடன் தெரிவித்துள்ளனர்.

Tamil News