மட்டக்களப்பு: அரசியல் பின்னணியில் காணிகள் அபகரிப்பு

அரசியல் பின்னணியில்  அரச காணிகள் அபகரிக்கப்படுவதாகவும் பொதுமக்களை குடியேறவிடாமல் தடுக்கும் செயற்பாடுகளை முன்னெடுப்பதாகவும்  மட்டக்களப்பு மக்கள் குற்றம்சுமத்தியுள்ளனர்.

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளார் பிரிவுக்குட்பட்ட சவுக்கடி பகுதியில் பொதுமக்கள் அரச காணிகளில்  குடியேற முற்பட்ட நிலையில்  காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

சவுக்கடி-மைலம்பவெளி ஆகியவற்றின் எல்லைப் பகுதியாகவுள்ள குறித்த பகுதியில் உள்ள மக்கள் நீண்டகாலமாக காணிக்கான கோரிக்கையினை விடுத்துவருகின்றனர். ஆனால் அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.

இந்த நிலையில் சவுக்கடி பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான ஏக்கர் அரச காணிகள் பணம் படைத்தவர்களினால் வேலிகள் அடைக்கப்பட்டு  அபகரிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், காணியற்ற தாங்கள் ஒரு 10பேர்ச் காணியை பிடிக்கும்போது வந்து தடுக்கும்  காவல்துறையினரும் கிராம சேவையாளரும் நூற்றுக்கணக்கான ஏக்கர் காணியை பணம் படைத்தவர்கள் சட்டமுரணாக பிடிக்கும்போது யாரும் அப்பகுதிக்கு வருவதில்லை என மக்கள் குற்றம்சுமத்துகின்றனர்.

குறிப்பாக அரசியல் பின்னணியில் குறித்த பகுதியில் காணிகள் அபகரிக்கப்படுவதாகவும் பொதுமக்களை குடியேறவிடாமல் தடுக்கும் செயற்பாடுகளை முன்னெடுப்பதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.