மட்டு.நகரான்
வறிய நிலையில் வாழும் மட்டக்களப்பு மீனவர்கள் -உதவிக்கரங்கள் நீளவேண்டும்!: கிழக்கு மாகாணத்தில் யுத்தம் மற்றும் இயற்கை அனர்த்தங்கள் காரணமாக ஏற்பட்ட இழப்புகள் என்பது எண்ணிலடங்காததாக உள்ளது. குறிப்பாக கிழக்கின் கரையோரப் பகுதியில் வாழும் மக்களின் வாழ்க்கையென்பது, இலகுவாகயிருந்தாலும் துன்ப துயரங்களும் அதிகமாகவே இருக்கின்றன.
யுத்தகாலத்தில் இழப்புகளை சாதாரணமாக எதிர்கொண்ட சமூகம், இன்று அந்த இழப்புகளை எதிர்கொள்வதை சாதாரணமாக கொள்ளாத நிலையே இருந்து வருகின்றது.
குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் கரையோர மீனவர்கள் வாழ்க்கையானது, போராட்டம் நிறைந்ததாகவே உள்ளது. தமிழ் மீனவர்களின் இந்த நிலைமை பாரிய போராட்டமாக இயிருந்து வருகின்றது.
1990களிலும் அதற்குப் பின்னரான காலப்பகுதியிலும் அதாவது 2000ஆம் ஆண்டு வரைக்கும் தொடர்ச்சியான யுத்தப் பாதிப்புகளைக்கொண்டு தங்களுடைய தொழில்களைச் செய்யமுடியாத நிலையில் இருந்ததோடு, 2002ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஏற்பட்ட ஓர் இடைவெளியில் தங்களுடைய தொழிலை நல்ல முறையில் மேற்கொண்டிருந்தனர்.
இதன் பின்னர் 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப்பேரலை அனர்த்தம் காரணமாக சகல தொழில் வளங்களையும் இழந்து, தங்களுடைய உறவுகளையும் இழந்து, நிர்க்கதியான நிலைக்குத் தள்ளப்பட்டனர். தொடர்ந்து 2009ஆம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போதும் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். இவ்வாறான பாதிப்புகளை எதிர்கொண்ட போதிலும், மீனவர்களின் வாழ்க்கையென்பது மீளமுடியாத துயரங்களையே சுமந்து நிற்பதைக் காணமுடிகின்றது.
அவர் சிறுவயது முதல் கடல் தொழில்மூலமே தமது வாழ்வாதாரத்தினை முன்னெடுத்திருந்தார். அதன்மூலமே அவரது வாழ்க்கையினை முன்கொண்டுசென்றார்.
உயிரிழந்த மீனவரின் குடும்பமானது, மிகவும் வறிய நிலையில் உள்ளது. இதுவே இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான மீனவர்களின் நிலையுமாகும். குறிப்பாக குறித்த மீனவர் கடலுக்குச் சென்று மீன்பிடித்துவரும் பணத்திலேயே அன்று அந்த வீட்டில் உள்ள பிள்ளைகளுக்கு உணவு வழங்கும் நிலை காணப்படுகின்றது.
இன்று அவர் உயிரிழந்துள்ள நிலையில், குறித்த பிள்ளைகளுக்கான உணவுத் தேவை, கல்விக்கான உதவிகளை வழங்குவதற்கு யாரும் அற்ற நிலையில், அந்தப் பிள்ளைகளும் கல்வியை இடை நடுவே கைவிடவேண்டிய துர்ப்பாக்கிய நிலையும் காணப்படுகின்றது.
இன்று மீனவர்களின் நிலைமை இதுவாகவேயுள்ளது. வடகிழக்கில் உள்ள இவ்வாறான மீனவர்களுக்கு கைகொடுக்க வேண்டியது யார் என்ற கேள்வி இங்கே எழுகின்றது. இவ்வாறான மீனவர்களை வைத்துத் தமது வயிறு வளர்க்கும் முதலாளிகள் இவர்கள் இல்லையென்றால் இவர்கள் குடும்பம் தொடர்பில் சிந்திக்கும் நிலையிருக்காது.
ஆழிப்பேரலை அனர்த்தத்தம், யுத்தத்தம் எனத் தொடர்ச்சியாக அழிவுகளையும், இழப்புகளையும் எதிர்கொண்டு, மீண்டும் ஒரு புதிய வாழ்க்கையை நோக்கிப் பயணிக்கத் தொடங்கிய மீனவர்கள், இன்று தங்களுடைய வாழ்வாதாரத் தொழிலை சுதந்திரமாகவும், நிம்மதியாகவும் செய்யமுடியாத நிலையில் தத்தளிக்கிறார்கள்.
“நிம்மதியாக வாழவேண்டும். எங்களுக்காக உழைக்க வேண்டும் என பல இலட்சம் ரூபாய்க்குக் கடன்பட்டு, கடற்றொழில்களை ஆரம்பித்து, இன்று நாங்கள் கடனாளிகளாகவே இருக்கின்றோம். வாழ்க்கையில் எந்த முன்னேற்றமும் இல்லை. பரம்பரை பரம்பரையாகக் கடற்றொழிலையே செய்து, அதன் மூலம் வருமானமீட்டி வாழ்ந்த நாங்கள், இன்று இந்தத் தொழில்களை கைவிட்டு, அரபு நாடுகளுக்கும் கொழும்புக்கும் வேலை தேடிச்செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது” எனக் கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான நிலைமை மாற்றப்பட வேண்டும். கிழக்கில் உள்ள தமிழ் மீனவர்களின் நிலைமைகள் தொடர்ச்சியாக பேசப்படும்போதே அவர்களுக்கான ஏதாவது உதவிக்கைகள் நீளும் நிலையேற்படும்.