நெல்லை குறைந்த விலையில் தனியாருக்கு விற்காதீர்; புசல் 50 ரூபாவுக்கு அரசாங்கம் கொள்வனவு

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது சிறுபோகத்தில் அறுவடை செய்யப்படும் நெல்லை அறுவடை காலத்திலேயே உடன் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்தின் அறிவுறுத்தலின் பேரில் நெல் சந்தைப் படுத்தும் சபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இம்மாவட்டத்தில் முன்கூட்டியே நெல் விதைப்பு இடம்பெறுவதால் ஏனைய மாவட்டங்களுக்கு முன்னதாகவே நெல் அறுவடை செய்யப்படுகிறது. இதனால் இச்சிறுபோகத்தில் தற்பொழுது அறுவடை தொடங்கியுள்ள காலத்திலேயே நெல் கொள்வனவு மேற் கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அரசாங்கத்தின் கவனத்துக்குக் கொண்டு வந்திருந்தார்.

இதனையடுத்து இம்மாவட்டத்திலுள்ள நெல் சந்தைப்படுத்தும் சபை களஞ்சியங்களூடாக நெல்லை கொள்வனவு செய்வதற்கு இச்சபையின் தலைவர் அனுமதி வழங்கியிருப்பதாக மட்டக்களப்பு மாவட்ட ஊடகப்பிரிவு தெரிவித்தது.

இதற்கமைய நெல் சந்தைப்படுத்தும் சபை களஞ்சியங்கள் ஊடாக நெல் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளது. முள்ளாமுனை, புலிபாய்ந்தகல், தும்பங்கேணி, கயுவத்தை ஆகிய இடங்களிலுள்ள நெல் களஞ்சியங்களிலும், தூர இடங்களிலுள்ள விவசாயிகளின் நலன் கருதி மேலும் பல இடங்களில் உருவாக்கப்படும் நடமாடும் களஞ்சியங்கள் ஊடாகவும் நெல்லை கொள்வனவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

இதன்படி இம்மாவட்ட விவசாயிகள் தனியார் வியாபாரிகளுக்கு நெல்லை குறைந்த விலைக்கு விற்பதைத் தவிர்த்து அரசாங்கத்தின் உத்தேச விலையான ஒரு புசல் நன்கு உலர்த்தப்பட்ட நெல்லை ஐம்பது ரூபாவிற்கும், போதிய உலர்வு செய்யப்படாத நெல்லை நாற்பத்து நான்கு ரூபாவிற்கும் விற்பனை செய்யலாம்.

தனிப்பட்ட வியாபாரிகளுக்கு குறைந்த விலைக்கு நெல்லை விற்று நஷ்டமடைவதிலிருந்து விடுபட்டு உரிய பயனைப் பெறுமாறும், முடிந்த அளவு நெல்லை உலர்த்தி அதிகபட்ச விலையான ஒரு புசல் ஐம்பது ரூபாவிற்கு விற்பனை செய்து கொள்ள முயற்சிக்குமாறும் அரச அதிபர் கேட்டுள்ளார்.

இந்த நெல் கொள்வனவு ஏற்பாடு சம்பந்தமாக நெல் சந்தைப்படுத்தும் சபையினால் தமக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தலில் மாவட்ட விவசாய அமைப்புகளின் பிரதி நிதிகளுக்கு தெளிவுபடுத்தும் விசேட கூட்டம் ஒன்று மட்டக்களப்பு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் அரசாங்க அதிபரின் தலைமையில் நடைபெற்றது.