Home செய்திகள் வவுனியா வடக்கு சிங்கள குடியேற்ற கிராமத்தில் வங்கி திறந்து வைப்பு

வவுனியா வடக்கு சிங்கள குடியேற்ற கிராமத்தில் வங்கி திறந்து வைப்பு

PHOTO 2021 08 14 16 08 20 5 வவுனியா வடக்கு சிங்கள குடியேற்ற கிராமத்தில் வங்கி திறந்து வைப்பு

வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட சிங்கள குடியேற்ற கிராமமான போகஸ்வெவ கிராமத்தில் சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கியின் நடமாடும் அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.

குறித்த அலுவலகத்தினை சமுர்த்தி வதிவிட பொருளாதார, நுண்நிதி, சுயதொழில் மற்றும் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க அவர்களின் தந்தையும் முன்னாள் மாகாண அமைச்சருமான எச்.பி.சேமசிங்க அவர்கள் திறந்து வைத்தார்.

வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட தமிழ் மக்களின் கிராமங்கள் சிலவற்றை கடந்த காலங்களில் அபகரிக்கப்பட்டு பெரும்பான்மையின மக்களுக்கான குடியேற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. அதில் ஒரு கிராமமான கலாபோகஸ்வேவ கிராமத்திற்கான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகின்றன. குறித்த பகுதிக்கு அண்மையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சே அவர்களும் மக்கள் குறைகேள் நிகழ்வுக்காக வருகை தந்திருந்தார்.

இதன் தொடர்ச்சியாக இப் பகுதி சமுர்த்தி பயனாளிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கியின் நடமாடும் அலுவலகம் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந் நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் அவர்களின் பிரதிநிதியாக அவரின் சகோதரர் லியாகத் அலி, வவுனியா பதில் அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், வவுனியா தெற்கு சிங்கள பிரதேச செயலாளர் காஞ்சன, வவுனியா தெற்கு சிங்கள பிரதேசபை உறுப்பினர்கள், சமுர்த்தி திணைக்கள உத்தியோகத்தர்கள், பௌத்த குருமார் என பலரும் கலந்து கொண்டனர்.

நீண்ட காலமாக தமிழ் மக்கள் தமக்கான அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரியும் தமது காணிகளில் இருந்து இராணுவத்தினர் வெளியேற வேண்டும் எனக் கோரியும் வரும் நிலையில் அவர்களின் எந்தக் கோரிக்கையையும் அரசாங்கம் செவிமடுக்கவில்லை. அத்தோடு வவுனியாவில் தமிழர்களின் நிலங்களை அபகரித்து உருவாக்கப்பட்ட சிங்கள குடியேற்றத்திற்கான சகல வசதிகளையும் ஜனாதிபதியின் நேரடி கண்காணிப்பில் செய்து கொடுக்கப்பட்டு வருகின்றது. இந்த சிங்கள கிராமத்தில் குடியேற்றப்பட்ட சிங்கள மக்களை சந்திக்க சென்ற கோட்டாபய, அதே மாவட்டத்தில் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் வாழ்ந்து வரும் தமிழ் மக்களை சந்திக்காது சென்றது அந்நேரம் பல கேள்விகளை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version