இலங்கையில் சீரற்ற வானிலை – மூவர் பலி

இலங்கையில் திடீரென ஏற்பட்ட சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது.  

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் நேற்று அதிகாலை முதல் கடும் மழை மற்றும் கடும் காற்றுடனான வானிலை நிலவி வருகின்றது. இவ்வாறு ஏற்பட்ட சீரற்ற வானிலையினால், 2,911 குடும்பங்களைச் சேர்ந்த 11,821 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.

யாழ்ப்பாணம், நுவரெலியா, கண்டி, காலி மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்கள் சீரற்ற வானிலையினால் பாதிக்கப்பட்டுள்ளன. இரத்தினபுரி மாவட்டத்தில் 945 குடும்பங்களைச் சேர்ந்த 3871 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்கள் அடங்கலான மத்திய மாகாணத்தில் 819 குடும்பங்களைச் சேர்ந்த 3371 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது. சீரற்ற வானிலை காரணமாக 25 வீடுகள் பகுதியளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, 643 குடும்பங்களைச் சேர்ந்த 3046 பேர், 16 பாதுகாப்பு நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.