Tamil News
Home உலகச் செய்திகள் அவுஸ்திரேலியாவில் மோசமடையும் வீட்டு வாடகை நெருக்கடி: அகதிகளுக்கு உதவி கிடைக்குமா?

அவுஸ்திரேலியாவில் மோசமடையும் வீட்டு வாடகை நெருக்கடி: அகதிகளுக்கு உதவி கிடைக்குமா?

கடந்த சில மாதங்களாக அவுஸ்திரேலியாவில் வீட்டு வாடகை தொடர்ந்து அதிகரித்து வருவதால் அவுஸ்திரேலியர்களை காட்டிலும் புலம்பெயர் மக்கள் கடும் நெருக்கடியை எதிர்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு, இணைப்பு விசாவில் உள்ள அகதிகளுக்கு உதவி வழங்குவது குறித்து சிந்திக்க வேண்டும் என அவுஸ்திரேலிய அரசாங்கத்திடம் அந்நாட்டு உள்துறை கோரியிருக்கிறது. 

அவுஸ்திரேலிய உள்துறை அரசாங்கத்திடம் முன்வைத்த இக்கோரிக்கை தகவலை பெறும் சுதந்திரத்தின் கீழ் பெறப்பட்ட தகவலின் மூலம் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு, அவுஸ்திரேலியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் பல ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகள் அல்லது புகலிடக் கோரிக்கையாளர்களை விடுவிப்பதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அகதிகள் நல வழக்கறிஞர்களின் கூற்றுப்படி, குற்றப்பின்னணி இல்லாத, அவுஸ்திரேலிய சமூகத்துக்கு  ஆபத்தாக கருதப்படாதவர்களை விடுவிப்பது அதிகரித்துள்ளது. கடந்த 2022 அக்டோபர் 31ல் தடுப்பில் 1,315 புகலிடக்கோரிக்கையாளர்கள் இருந்திருக்கின்றனர். அதுவே கடந்த ஏப்ரல் 2023 கணக்குப்படி, இந்த எண்ணிக்கை 1,128 ஆக குறைந்து காணப்படுகிறது.

இவ்வாறு குடிவரவுத் தடுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறவர்கள் அவுஸ்திரேலியாவில் அந்தஸ்து தீர்மானிக்கப்படும் வரையிலான உதவி சேவைகள் (Status Resolution Support Services-SRSS) பெறுவதற்கு தகுதியுடைவர்கள் என அவுஸ்திரேலிய உள்துறை குறிப்பிடுகிறது. இன்றைய நிலையில், இச்சேவைகளை அகதிகள்/புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு வழங்குவதில் பல கட்டுப்பாடுகள் உள்ளன.

இச்சேவைகளின் மூலம் தற்காலிக விசாக்களில் உள்ள புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு  தங்குமிடத்தற்கான உதவி, உணவு, மற்றும் பிற பண உதவி வழங்கப்படுகிறது. ஆனால், அவுஸ்திரேலியாவில் இன்று இந்த உதவி தற்காலிக விசாக்களில் உள்ள புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு கிடைக்கிறதா என்று கேட்டால் அது மிகப்பெரும் கேள்விக்குறியாகவே உள்ளது.

முன்பு ஆட்சியிலிருந்த தாராளவாத தேசிய கூட்டணி அரசாங்கத்தின் காலத்தில் இந்த சேவைகளுக்கான நிதி பெரிதும் குறைக்கப்பட்டு இந்த உதவியை பெறுவதற்கான தகுதி மேலும் இறுக்கப்பட்டது.   அதாவது 2016-17ல் 300மில்லியன் டொலர்கள் மதிப்பில் வழங்கப்பட்டு வந்த உதவி சேவைகள் 2022-23ல் வெறும் 15 மில்லியன் டொலர்களாக உள்ளது. அத்துடன் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு 29 ஆயிரம் பேர் இச்சேவைகளை பெற்று வந்தனர், இன்றோ வெறும் 1,500 பேர் மட்டுமே இதனை பெறுகின்றனர்.

“தற்காலிக இணைப்பு விசாக்களில் சுமார் 1 இலட்சத்துக்கும் அதிகமானோர் இருக்கின்றனர். இவர்களுக்கு இச்சேவைகள் கிடைப்பதில்லை. இதில் பலர் வேலை செய்து வருகின்றனர். குறிப்பாக, எவ்வித வருமானமுமின்றி வீடற்ற நிலையில் அல்லது வீடற்ற நிலையை எதிர்கொள்ளும் ஆபத்தில் உள்ள 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் புகலிடக்கோரிக்கையாளர்கள் குறித்தே நாங்கள் பெரிதும் கவலைக் கொள்கிறோம்,” என அவுஸ்திரேலிய அககதிகள் கவுன்சிலின் பால் பவுர் கூறியிருக்கிறார்.

“அவுஸ்திரேலியா எங்கும் வீட்டு வாடகை, வாழ்க்கைச் செலவு நெருக்கடி இருக்கிறது. அதிலும் புகலிடக்கோரிக்கையாளர்கள் உள்பட அடிமட்டத்தில் உள்ள சமூகத்தினர் இந்நெருக்கடியால் பெரிதும் பாதிகப்பட்டுளனனர்,” என புகலிடக்கோரிக்கையாளர் வள மையத்தின் ஜனா பவிரோ தெரிவித்துள்ளார்.

Exit mobile version