அவுஸ்திரேலியா: அகதிகளுக்கான விசாவில் மாற்றம், அகதிகள் படகு வரக்கூடும் என்ற அச்சத்தால் எல்லைகளில் கண்காணிப்பு தீவிரம் 

அவுஸ்திரேலியாவில் அகதிகளுக்கான விசாவில் புதிய மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ள சூழலில், ஆஸ்திரேலிய அரசு எல்லைப் பாதுகாப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது. 

அவுஸ்திரேலியாவில் தற்காலிக பாதுகாப்பு விசாக்கள், பாதுகாப்பான புகலிட (Safe-Haven Enterprise) விசாக்களில் உள்ள 19 ஆயிரம் அகதிகளுக்கு நிரந்தர விசாக்களை வழங்குவதாக கடந்த பெப்ரவரி 13 அன்று அவுஸ்திரேலியாவின் தொழிற்கட்சி அரசாங்கம் அறிவித்தது.

படகு மூலம் வருபவர்களை நாடுகடத்தும் கொள்கை 2013 ல் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், அதற்கு முன்பு வந்த அகதிகளுக்கு மட்டுமே தற்போதைய மாற்றம் பொருந்தும் என தொழிற்கட்சி அரசாங்கம் குறிப்பிட்டிருந்தது. ஆனால், இந்த மாற்றங்களை ஆட்கடத்தல்காரர்கள் தங்கள் வியாபாரத்துக்காக பயன்படுத்துவார்கள் என முன்பு ஆட்சியிலிருந்த தாராளவாத தேசிய கூட்டணி கூறி வருகிறது.

இதையடுத்து அவுஸ்திரேலிய எல்லைகளுக்குள் அகதிகளுடன் வர முயலும் படகுகளை கண்காணிக்கும் விதமாக கண்காணிப்பு விமானம், கூடுதலான கப்பல்கள் ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

அதே சமயம், படகு வழியாக வர முயல்பவர்களை எச்சரிக்கும் விதமாக அவுஸ்திரேலிய எல்லைப்படை பல மொழிகளில் காணொலிகளை வெளியிட்டுள்ளது.

அவ்வாறு தமிழில் வெளியிடப்பட்ட காணொலியில், “ஆள் கடத்தும் நபர்களை நம்பலாம் என்று நீங்கள் நினைத்தால், அதைப் பற்றி மீண்டும் யோசியுங்கள். கனடாவை நோக்கி சட்டத்துக்குப் புறம்பாக மேற்கொள்ளப்பட்ட படகுப் பயணத்தில் இருந்து 303 இலங்கை நாட்டவர்கள் சமீபத்தில் மீட்கப்பட்டனர்,” என அவுஸ்திரேலிய எல்லைப்படையின் தளபதி ஜஸ்டின் ஜோன்ஸ் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

மேலும் பேசியுள்ள எல்லைப்படை தளபதி ஜோன்ஸ், “பயணிகள் உயிருக்காகப் போராடிக் கொண்டிருந்த பொழுது படகின் கேப்டனும் மற்ற படகோட்டிகளும் படகை நிர்கதியாய் விட்டுவிட்டுத் தப்பினர். ஆள் கடத்தும் நபர்களுக்கு உங்களுடைய பாதுகாப்பைப் பற்றிய அக்கறை எதுவும் இல்லை. அத்துடன் நீங்கள் செல்லவிருக்கும் இடத்தை நீங்கள் அடைகிறீர்களா என்ற கவலையும் அவர்களுக்கு இல்லை. ஆள் கடத்தும் நபர்களை நம்பாதீர்கள்- உங்களுடைய உயிர் உட்பட அனைத்தையும் நீங்கள் இழக்க நேரிடலாம்,” என எச்சரித்திருக்கிறார்.