அவுஸ்திரேலியா: அகதிகள் முகாமை நிர்வகிக்க தனியார் நிறுவனத்துக்கு ஒரு நாளுக்கு 7 இலட்சம்  டொலர்களா?

நவுருத்தீவில் செயல்பட்டு வரும் அவுஸ்திரேலிய கடல் கடந்த தடுப்பு முகாமை நிர்வகிக்க அமெரிக்க தனியார் சிறை மேலாண்மை நிறுவனத்துக்கு ஒரு நாளுக்கு 7.5 இலட்சம் அவுஸ்திரேலிய டொலர்களை அவுஸ்திரேலிய அரசு செலுத்த இருக்கிறது. 

அமெரிக்காவில் சிறைச்சாலைகளை நிர்வகித்து வரும் Management and Training Corporation எனும் இந்நிறுவனம் தொடர்பாக அலட்சியம் மற்றும் பாதுகாப்பு தோல்விகளால் தடுப்பில் இருந்த பெண் கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உள்ளானது, அரசாங்கத்துக்கு லஞ்சம் கொடுத்த விவகாரத்தில் ஆயிரக்கணக்கான டொலர்கள் அபராதம் செலுத்தியது, தவறான குடிவரவுத் தடுப்பு காவல் உள்ளிட்ட பல சர்ச்சைகள் உள்ளன.

இவ்வாறான சூழலில், நவுருத்தீவு முகாமில் மேற்கொள்ளப்படும் 62 நாட்கள் பணிக்காக 47.3 மில்லியன் டொலர்கள் மதிப்பிலான ஒப்பந்தத்தை அந்நிறுவனம் பெற்றுள்ளது.

அவுஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம் செயல்படும் இம்முகாமில் அதிகாரப்பூர்வ கணக்குப்படி,  111 அகதிகள் மற்றும் தஞ்சக்கோரிக்கையாளர்கள் சிறைவைக்கப்பட்டுள்ளனர்.  அந்த வகையில், சிறைவைக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு அகதி அல்லது தஞ்சக்கோரிக்கையாளரை நிர்வகிக்க தலா 4.25 இலட்சம் அவு.டொலர்களை அந்நிறுவனத்துக்கு அவுஸ்திரேலிய அரசு செலுத்தும்.

இதற்கு முன்னதாக இம்முகாமை எவ்வித போட்டி ஒப்பந்ததாரருமின்றி Canstruct International எனும் நிறுவனம் ஐந்தாண்டுகளாக நிர்வகித்து வந்தது. இதற்காக Canstructக்கு 1.82 பில்லியன் அவு.டொலர்கள் செலுத்தப்பட்டுள்ளன.

இம்முகாமை Canstruct நிறுவனம் நிர்வகித்த வந்த காலத்தில், தடுத்து வைக்கப்பட்ட அகதிகளின் எண்ணிக்கையில் 90 சதவீதம் வீழ்ச்சி (1100 பேரிலிருந்து சுமார் 100 ஆக குறைந்தது) ஏற்பட்ட போதிலும், மாதந்தோறும் வழக்கமாக செலுத்தப்படும் 35 மில்லியன் முதல் 40 மில்லியன் அவு.டொலர்களே இந்நிறுவனத்துக்கு செலுத்தப்பட்டிருக்கிறது.

அவுஸ்திரேலிய அரசின் கணக்குப்படி, 2021ம் ஆண்டில் ஒரு அகதியை நவுருத்தீவில் சிறை வைத்திருப்பதற்காக ஆண்டுக்கு 4.3 மில்லியன் அவு.டொலர்கள் செலவு செய்யப்பட்டிருக்கிறது.