Home செய்திகள் தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு ஆம்பர் கிரீஸ் கடத்த முயற்சி- 3 பேர் கைது

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு ஆம்பர் கிரீஸ் கடத்த முயற்சி- 3 பேர் கைது

Tamil News large 2453342 தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு ஆம்பர் கிரீஸ் கடத்த முயற்சி- 3 பேர் கைது

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு ரூ.23 கோடி மதிப்பிலான ஆம்பர் கிரீசை கடத்த முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி கடலோர பகுதி சமீபகாலமாக கடத்தல்காரர்களின் சொர்க்கபுரியாக மாறி வருகிறது. தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு விரலி மஞ்சள், பீடி இலை, கடல் அட்டை உள்ளிட்ட பொருட்கள் அதிக அளவில்  கடத்தப்பட்டு வந்தன. இதனால் கடத்தல்காரர்கள் அவ்வப்போது கைது செய்யப்பட்டும் வந்தனர்.

இந்த நிலையில் கடத்தல் அடுத்தக்கட்டத்தை எட்டி இருப்பதாக கருதப்படுகிறது.

குறிப்பாக போதை பொருட்களும் தொடர்ச்சியாக பிடிக்கப்பட்டு உள்ளன. அதே போன்று இலங்கையில் இருந்து ஆட்களை படகுகளில் தூத்துக்குடிக்கு சட்ட விரோதமாக கடத்தி வந்த சம்பவமும் அரங்கேறி உள்ளது. இதே போன்று இங்கிலாந்தை சேர்ந்த கடத்தல்கார் ஜோனதன் தோர்ன் தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு தப்பி செல்ல முயன்ற போது கைது செய்யப்பட்டார். இது போன்று கடத்தல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் ஆம்பர் கிரீஸ் என்னும் திமிங்கல உமிழ்நீர் கடத்தலும் சமீபகாலமாக நடந்து வருகிறது.

தூத்துக்குடி கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு சிலர் தடை செய்யப்பட்ட பொருட்களை கடத்துவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலையடுத்து,

தூத்துக்குடி கடற்கரை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அரிய வகை ஆம்பர் கிரீஸ் கடத்தப்பட்டு வருவது என்பது தெரிய வந்துள்ளது.

இந்த ஆம்பர் கிரீஸ் திமிங்கலம் குடலில்  சுரக்கக் கூடிய மெழுகு போன்ற திரவம் ஆகும். இந்த ஆம்பர் கிரீஸ் 20 வயதுக்கு மேல் உள்ள திமிங்கலங்கள் உடலில் இருந்து வெளியேற்றப்படுகிறது. இது மெழுகு போன்று இருக்கும். திமிங்கலம் உடலில் இருந்து வெளியேற்றப்படும் ஆம்பர் கிரீஸ் கடலில் மிதக்கும் தன்மை கொண்டது. இந்த ஆம்பர் கிரீஸ்  உயர் தரமான நறுமண பொருட்கள் தயாரிக்க பயன்படுத்தி வருகின்றனர்.

குறிப்பாக துபாய் உள்ளிட்ட நாடுகளில் இந்த ஆம்பர் கிரீஸ் அதிக அளவில் நறுமண பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது. எகிப்தியர்கள் பழங்காலத்தில் மருந்து பொருட்களாகவும் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இத்தகைய அரிய வகை ஆம்பர் கிரீஸ் இந்தியாவில் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இதைத் தொடர்ந்து  ஆம்பர்கிரீஸ் கடத்தல் குற்றச்சாட்டில் மூன்று பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து  23 கிலோ எடை கொண்ட ஆம்பர்கிரீஸ் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இதன் சர்வதேச மதிப்பு ரூ.23 கோடி என்று கூறப்படுகிறது.

மேலும் கடந்த ஜூன் மாதம் திருச்செந்தூர் கடற்கரை பகுதியிலும் கடத்துவதற்காக வைத்து இருந்த 1½ கிலோ ஆம்பர் கிரீசை  காவல் துறையினர் பறிமுதல் செய்திருந்தனர். இதனால் தூத்துக்குடி கடத்தல் கேந்திர மையமாக மாறி வருவதாக கருதப்படுகிறது.

இதனால்  காவல் துறையினரின் கண்காணிப்பை தீவிரப்படுத்தவும்   கோரிக்கை வலுத்து உள்ளது.

Exit mobile version