சிறிலங்கா அரசால் தமிழர்களின் நில அதிகரிப்பு அதிகரித்து வரும் வகையில் வவுனியா இத்திக்குளம் கிராமத்தையும் அபகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப் படுகின்றன. நில அபகரிப்பு குறித்து நீதிமன்றங்களுக்கு மக்கள் செல்லாத வரையில் நில கையகப்படுத்துதல் சட்டத்தை பயன்படுத்தி அரசால் நிலத்தை கையகப்படுத்த முடியம் என்கின்ற அளவிலேயே நில கையப்படுத்தல் சட்டம் உள்ளது. இந்த சட்டத்தை பயன்படுத்தி நில அபகரிப்புக்கள் வடக்கு கிழக்கு பகுதிகளில் தொடர்கின்றமை கண்கூடு.
அந்தவகையில் பெரும்பாலும் முல்லைத்தீவு வவுனியா மாவட்டங்கள் தொடர்ந்து குறிவைக்கப்பட்டு வருகின்றன.
இதையடுத்து வவுனியா சமளம்குளம் கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட தமிழர்களின் பாரம்பரிய கிராமங்களில் ஒன்றாகிய இத்திக்குளம் கிராமத்தின் எல்லையில் அமைந்துள்ள கல்நாட்டுகுளப் பகுதிகளின் எல்லைகளை இலங்கை வனத்துறையினர் கையகப்படுத்தி வருகின்றனர்.
நாட்டில் கொரோனா அபாயம், ஊரடங்கு உத்தரவு, பொருளாதாரா அவசரநிலைக்கு மத்தியில் இரகசியமாக தமிழர்களின் காணிகளை அபகரிக்கும் நடவடிக்கைகள் தொடர்கின்றமை மக்களுக்கு பெரும் அச்சத்தை உண்டுபண்ணியுள்ளது.
இந்த நில அபகரிப்பை தடுத்து நிறுத்த குறித்த இத்திக்குளம் பகுதிக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சென்றிருந்தனர்.
இதையடுத்து “நாட்டில் மக்களின் அன்றாட வாழ்க்கை கேள்விக் குறியாகிக் கொண்டு வரும் வேளை, அரசின் இவ்வாறான செயற்பாடுகள் கவலையளிப்பதாகவும் இது தொடர்பில் துரித நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா .சாணக்கியன் தெரிவித்துள்ளார்.