வவுனியா ஆலயத்தில் நடராஜர் சிலையைத் திருடிய இராணுவ சிப்பாய்

வவுனியா புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் உள்ள ஆலயமொன்றில் இருந்து பித்தளை நடராஜர் சிலையை திருடியதாக சந்தேகத்தின் பேரில் இராணுவ சிப்பாய் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (14) கைது செய்யப்பட்டதாக வவுனியா  காவல்துறையினர் தெரிவித்தனர்.

அக்கராயன் குளத்திலுள்ள இராணுவ முகாமில் கடமையாற்றும் இராணுவ வீரர் மாதாந்த விடுமுறையை முடித்துக்கொண்டு வீடு திரும்பிய போதே இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக  காவல்துறையினர் தெரிவித்தனர்.

சந்தேகநபர் கோவிலில் உள்ள விக்கிரகத்தை திருடி விற்பனைக்காக பையில் வைத்துக்கொண்டிருந்த போது முச்சக்கரவண்டி சாரதிகள் குழுவினால் பிடிக்கப்பட்டு வவுனியா  காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

திருடப்பட்ட சிலையின் பெறுமதி சுமார் 50,000 ரூபாவென விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. கைதான சந்தேகநபர் விசாரணைகளின் பின் வவுனியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா  காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.