இசைநிகழ்ச்சியில் இராணுவம் தாக்குதல்: 60 பேர் பலி

மியான்மர் நாட்டின் இராணுவம் நடத்திய தாக்குதலில் 60 பேர் பலியாகியுள்ளதாக கச்சின் இனக்குழு தெரிவித்துள்ளது. 

மியான்மரின் வடக்கு மாநிலமான கச்சினில் ஞாயிறு இரவு கொண்டாட்ட நிகழ்வு ஒன்றை கச்சின் இன சிறுபான்மையினரின் முக்கிய அரசியல் அமைப்பான ‘கச்சின் சுதந்திர அமைப்பு’ ஏற்பாடு செய்திருந்தது. விழாவின் ஒருபகுதியாக நடைபெற்றுக்கொண்டிருந்தது. அப்போது மியான்மர் இராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில்   பாடகர்கள் மற்றும் இசைக்கலைஞர்கள் உட்பட 60க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக இனக் குழு  தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு பிப்ரவரியில் ஆங் சான் சூகியின் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திடம் இருந்து இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதற்குப் பிறகு நடந்துள்ள மிகப்பெரிய வான்வழித்தாக்குதல் இது.

இச்சம்பவத்திற்கு பிறகான வீடியோ காட்சிகளை கச்சின்மக்கள்மீது அனுதாபம் கொண்ட ஊடகங்கள் வெளியிடுகின்றனவே தவிர, அரசாங்கமோ, இராணுவமோ இத்தாக்குதல் சம்பவம் மற்றும் பின்விளைவுகள் பற்றி கருத்து எதையும் தெரிவிக்கவில்லை.

மியான்மரில் வன்முறை பெருகிவருவது குறித்து விவாதிக்க தென்கிழக்காசிய வெளியுறவு அமைச்சர்கள் இந்தோனேசியாவில் சிறப்புக் கூட்டத்தை நடத்துவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னதாக இந்த தாக்குதல் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.