அவுஸ்திரேலிய விடுதியில்  தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் அகதிகள் கிடையாதா? சர்ச்சையில் சிக்கிய  பிரதமர்

அவுஸ்திரேலிய விடுதியில் தடுத்து

அண்மையில், வானொலி உரையாடல் ஒன்றில் அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் கலந்து கொண்ட போது கேள்வி எழுப்பிய தொகுப்பாளர், “டென்னிஸ் வீரர் ஜோகோவிச் வைக்கப்பட்டிருந்த அதே  விடுதியில்  ஒன்பது ஆண்டுகளுக்கு மேல் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகளும் வைக்கப்பட்டுள்ளனர். இந்த அகதிகளை நிராதரவான நிலையில் வைத்திருக்க மக்களின் வரிப்பணம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இதை எப்படி ஏற்றுக்கொள்வது?” என வினவி இருந்தார். 

அதற்கு பதிலளித்த பிரதமர் ஸ்காட் மாரிசன்,  அவுஸ்திரேலிய விடுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிலர் அகதி கிடையாது என சந்தேகத்தை எழுப்பும் வகையில் பேசியிருந்தார். இந்த பதிலுக்கு கண்டனங்களை தெரிவித்துள்ள மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆஸ்திரேலிய இயக்குநர் எலைனி பியர்சன், “இவர்களின் (விடுதியில் தடுப்பில் உள்ளவர்கள்) அகதி அந்தஸ்து அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில் இவர்களை அகதிகள் கிடையாது எனக் கூறுவது அப்பட்டமான பொய்,” என கண்டித்திருக்கிறார்.

தி கார்டியன் ஊடகத்தின் கணக்குப்படி,  தடுப்பிற்கான மாற்று இடமாக செயல்படும் மெல்பேர்ன் விடுதியில் 25 அகதிகளும் 7 தஞ்சக்கோரிக்கையாளர்களும் ஆஸ்திரேலிய குடிவரவுத்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அவுஸ்திரேலிய பிரதமரின் பதில் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், ஊடக சந்திப்பில் பேசிய பிரதமர் ஸ்காட் மாரிசன், “அந்த இடத்தில் உள்ள ஒவ்வொரு நபரும் அகதி கிடையாது என நான் கூறவில்லை. என்னுடைய புரிதலின்படி, அங்கு உள்ள சிலர் அகதி  கிடையாது என்றே கூறினேன்,” எனத் தெரிவித்திருக்கிறார்.

“அகதிகள் சாசனம் மற்றும் அவுஸ்திரேலிய விதிகளின் கீழ் பாதுகாப்பு பெற முடியாத நபர்களும் தடுப்பில் இருந்திருக்கின்றனர்,” எனக் கூறியுள்ள ஸ்காட் மாரிசன், பாதுகாப்பு பெற்றவர்கள் பிறர் சட்டவிரோதமாக படகில் அவுஸ்திரேலியாவுக்கு வந்தவர் எனச் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

சர்வதேச சட்டத்தின் அடிப்படையில், தஞ்சம் கோருவது என்பது சட்டவிரோதமானது. அவுஸ்திரேலியா கையெழுத்திட்டுள்ள சர்வதேச அகதிகள் சாசனத்தின் படி இனம், மதம், நாட்டுரிமை, அரசியல் கருத்து காரணமாக துன்புறுத்தல் எதிர்கொள்ளக்கூடிய எவரும் ‘அகதி’ எனக் கூறப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலிய அரசை பொறுத்தமட்டில், படகு வழியாக அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைந்த அகதிகளை ஒருபோதும் நாட்டில் நிரந்தரமாக மீள்குடியமர்த்த மாட்டோம் எனக் கூறி வருகிறது. அதன் அடிப்படையில், பல அகதிகளை சுமார் 9 ஆண்டுகளாக அவுஸ்திரேலிய அரசு தடுப்பில் வைத்திருக்கிறது.

Tamil News