காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உயிருடன் இருக்கிறார்களா? இல்லையா?”-மனோ கணேசன் கேள்வி

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உயிருடன் இருக்கிறார்களா?

“எங்கே எங்கள் உறவுகள்? கடத்தப்பட்டு, சரணடைந்து, கைதாகி காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் உறவுகளுக்கு என்ன நிகழ்ந்தது? அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா? இல்லையா?” என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான  மனோ கணேசன்  கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் “வடக்குக்கு போன நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்‌ஷவும், காணாமல் போனோர் அலுவலக தலைவர் மஹேஷ் கடுலந்தவும் “மக்கள் ஒத்துழைத்தால், காணாமல் போனோர் பிரச்சினைக்குத் தீர்வு காணலாம்” என கூறி வந்துள்ளனர். மேலும் காணாமல் போனோர் குடும்பங்களுக்கு கொடுப்பனவுகள், வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை, அரச மருத்துவமனைகளில் முன்னுரிமை எனவும் வாக்குறுதிகளை அளித்துள்ளனர்.

மக்களிடமிருந்து என்ன ஒத்துழைப்பை இவர்கள் கோருகிறார்கள் என எனக்குத் தெரியவில்லை. வலிந்து காணாமல் போனோர் குடும்பங்களின் முதல் கேள்வி, முதல் கோரிக்கை, நானறிந்த வரையில், கடத்தப்பட்டு, சரணடைந்து, கைதாகி காணாமல் போன தங்கள் உறவுகளுக்கு என்ன நிகழ்ந்தது என்பதே என நான் நினைக்கிறேன். இந்த முதல் கேள்விக்கு பதில் தேடுங்கள்.

அதையடுத்து குடும்பங்கள் விரும்பினால், கொடுப்பனவுகள், வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை, அரச மருத்துவமனைகளில் முன்னுரிமை ஆகியவற்றை வழங்கலாம். இதை நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்சவும், காணாமல் போனோர் அலுவலக தலைவர் மஹேஷ் கடுலந்தவும் புரிந்து கொள்ள வேண்டும்.

கடந்த ஆட்சியின் போது பல கட்டமைப்பு முன்னேற்றங்கள் நிகழ்ந்தாலும்கூட, அன்று எதிர்கட்சியாக இருந்த, இன்றைய ஆளும் கட்சியான ன் பொதுஜன முன்னணி எம்மை முழுமையாக கடமையாற்ற விடவில்லை. காணமல் போனோர் அலுவலகம், முன்னாள் புலிகளுக்கு கொடுப்பனவுகள் கொடுக்கின்றது எனவும், புலிகளுக்காகவே அது அமைக்கப்பட்டது எனவும் இவர்கள் சொன்னார்கள்.

இன்று திடீரென முற்போக்கு ஜனநாயகவாதிகளாக வேடம் பூண்டுள்ள பல்வேறு பிரபல அரசியல்வாதிகளும் எம்மை எதிர்த்தார்கள். முன்னாள் புலிகளுக்காக அமைக்கப்பட்ட அலுவலகம் இன்னொரு பிரபல புலியின் பொறுப்பில் விடப்பட்டுள்ளது என என்னையும் திட்டி தீர்த்தார்கள். இன்று இவற்றுக்கு எல்லாம் பதில் கூறவேண்டிய காலம் வந்து விட்டது. இன்றும் இனவாதம் இல்லாமல் இல்லை. ஆனால், அந்த இனவாதத்தை நேரடியாக எதிர்க்கக்கூடிய காலம் வந்து விட்டது.

இவற்றையெல்லாம், இன்றைய பொருளாதார நெருக்கடி உருவாக்கி விட்டது. அந்த நெருக்கடித்தான், பெரும்பான்மை இன இளையோர் மத்தியில் காலிமுக திடல் போராட்டத்தையும் உருவாக்கி விட்டது. ஆகவே இனி நாங்கள், “எங்கே எங்கள் உறவுகள்? கடத்தப்பட்டு, சரணடைந்து, கைதாகி காணாமல் போன எங்கள் உறவுகளுக்கு என்ன நிகழ்ந்தது? அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா? இல்லையா?” என கேள்விகள் எழுப்பும் வேளை வந்து விட்டது. 2007ம் வருடம் நானும், நண்பன் ரவிராஜும் ஆரம்பித்த மக்கள் கண்காணிப்பு குழுவின் நோக்கங்களை நிறைவேற்ற காலம் வந்து விட்டது என நினைக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

Tamil News