வடக்கு – கிழக்கில் 12 தமிழ் பேசும் சட்டத்தரணிகள் நீதித்துறை அலுவலர்களாக நியமனம்  

12 தமிழ் பேசும் சட்டத்தரணிகள்

வடக்கு – கிழக்கைச் சேர்ந்த 12 தமிழ் பேசும் சட்டத்தரணிகள் நீதித் துறை அலுவலகர் வகுப்பு ii தரம் i பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் அக்கரைப்பற்றை சேர்ந்த கே.எல்.எம். சாஜித் (வயது -31) யாழ்ப்பாணத்தை சேர்ந்த சட்டத்தரணி தர்மலிங்கம் பிரதீபன் (வயது-32) ஆகிய இருவரும் இம்முறை குறைந்த வயதில் நீதிச் சேவையில் நியமிக்கப்பட்டுள்ளார்கள். எனினும் இளம் வயதில் நீதிச் சேவையில் இணைத்துக் கொள்ளப்படுவது இது முதன்முறையில்லை.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 5 சட்டத்தரணிகளும் வவுனியா, முல்லைத்தீவைச் சேர்ந்த தலா ஒரு சட்டத்தரணிகளும் திருக்கோவிலைச் சேர்ந்த ஒருவரும் பொத்துவிலைச் சேர்ந்த ஒருவரும் மூதூரைச் சேர்ந்த ஒருவரும் அக்கரைப்பற்றைச் சேர்ந்த இரு சட்டத்தரணிகளும் இவ்வாறு நீதித் துறை அலுவலகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் 12 பேரும் வரும் நவம்பர் 15ஆம் திகதி திங்கட்கிழமை நீதிச் சேவை ஆணைக்குழுவில் உறுதி உரை எடுத்துக்கொள்ளவுள்ளனர். அவர்கள் தொடர்ந்து நீதிபதிகள் பயிற்சிக் கல்லூரியில் இடம்பெறும் பயிற்சியின் பின்னர் வடக்கு – கிழக்கு நீதிமன்றங்களில் நியமிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.