அரசாங்கத்தினால் உள்ளக ரீதியில் ஸ்தாபிக்கப்படக்கூடிய எந்தவொரு பொறிமுறையையும் ஏற்றுக்கொள்ள முடியாது-யோ.கனகரஞ்சனி

போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு 13 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், இதுவரை ஆட்சியிலிருந்த எந்தவொரு அரசாங்கமும் எமக்கான தீர்வைப் பெற்றுத்தரவில்லை என வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் தலைவி யோ.கனகரஞ்சனி தெரிவித்துள்ளார்.

நீதியரசர் ஏ.எச்.எம்.டி. நவாஸ் தலைமையிலான ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை கிடைக்கப்பெற்றதன் பின்னர், அதனை அடிப்படையாகக் கொண்டு உள்ளக ரீதியில் உண்மையை கண்டறியும் பொறிமுறையொன்றை ஸ்தாபிக்கவிருப்பதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ள நிலையில், மேற்படி ஆணைக்குழுவில் கடந்த புதன்கிழமை (ஒக் 12) முன்னிலையாகியிருந்த இலங்கைக்கான தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் எஸ்.ஈ.ஸ்கால்க் தென்னாபிரிக்காவில் உருவாக்கப்பட்ட உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பில் விரிவாக விளக்கமளித்தார்.

இந்நிலையில்,  உண்மை மற்றும் நல்லிணக்க அலுவலகம் உள்ளடங்கலாக அரசாங்கத்தினால் உள்ளக ரீதியில் ஸ்தாபிக்கப்படக்கூடிய எந்தவொரு பொறிமுறையையும் எம்மால் ஏற்றுக்கொள்ளமுடியாது. அதேபோன்று கடந்த காலங்களில் நியமிக்கப்பட்ட எந்தவொரு ஆணைக்குழுக்களும் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு தீர்வை பெற்றுத்தரும் நோக்கில் அவர்களை மனிதாபிமானத்துடன் அணுகவில்லை என்று வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் தலைவி யோ.கனகரஞ்சனி தெரிவித்துள்ளார்.