அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் கொழும்பில் ஆரம்பம்

அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் கொழும்பில் தற்போது ஆரம்பமாகியுள்ளது.

போராட்டத்தின் முக்கிய கோரிக்கையாக,பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோரை விடுதலை செய்ய வேண்டும்.

பயங்கரவாத தடைச் சட்டம் உட்பட அனைத்து அடக்குமுறைச் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும். கருத்துச் சுதந்திரத்தின் மீதான அரசாங்கத்தின் அடக்குமுறையை இல்லாதொழிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருதானை சுற்றுவட்டப் பகுதியில் இந்தப் போராட்டம் தற்போது ஆரம்பமாகியுள்ளது.

இதன்போது, அடக்குமுறையை நிறுத்து, பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கு போன்ற வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் ஏந்தி போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பல்வேறு  அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகள் மற்றும் காலி முகத்திடல் போராட்டக் குழுவின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இன்றைய போராட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, முன்னிலை சோசலிச கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் முற்போக்குக் கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட சுமார் 20 கட்சிகளும் 150க்கும் அதிகமான சிவில் சமுக அமைப்புகளும் பங்கேற்கவிருப்பதாக அறிவித்துள்ளன.