தெற்காசியப்பிராந்திய வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்கள் தொடர்பில் நிகழ்நிலை அருங்காட்சியகத்தை உருவாக்கும் முயற்சியில் சர்வதேச மன்னிப்புச்சபை

இலங்கை உள்ளடங்கலாக தெற்காசியப்பிராந்தியத்தில் இடம்பெற்ற வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்களை உள்ளடக்கிய நிகழ்நிலை அருங்காட்சியகமொன்றை உருவாக்குவதை முன்னிறுத்தி சர்வதேச மன்னிப்புச்சபை செயற்பட்டுவருகின்றது.

இலங்கையைப் பொறுத்தமட்டில் உள்நாட்டு யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியிலும், அதற்கு முன்னரான இனக்கலவரங்களின்போதும் பெருமளவானோர் வலிந்து காணாமலாக்கப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச கட்டமைப்புக்கள் மற்றும் உள்நாட்டில் நிறுவப்பட்ட விசாரணை ஆணைக்குழுக்களின் அறிக்கைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக கடந்த 2009 ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தத்தின்போது வலிந்து காணாமலாக்கப்பட்ட தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையை வெளிப்படுத்துமாறும், நீதியை நிலைநாட்டுமாறும் வலியுறுத்தி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் நேற்றுடன் 2204 ஆவது நாளாகவும் தொடர் போராட்டத்தை முன்னெடுத்துவருகின்றனர்.

இவ்வாறானதொரு பின்னணியிலேயே தெற்காசியப்பிராந்திய நாடுகளில் இவ்விவகாரம் தொடர்பில் பணியாற்றிவரும் அரச சார்பற்ற அமைப்புக்களுடன் இணைந்து, இயலுமானவரையில் தெற்காசியப்பிராந்தியத்தில் இடம்பெற்ற அனைத்து வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்களையும் உள்ளடக்கிய நிகழ்நிலை அருங்காட்சியகமொன்றை உருவாக்குவதற்கு சர்வதேச மன்னிப்புச்சபை திட்டமிட்டுள்ளது.

இச்செயற்திட்டத்திற்கான ஒத்துழைப்பை வழங்க முன்வருமாறு இலங்கையைத் தளமாகக்கொண்டியங்கும் சில அரச சார்பற்ற அமைப்புக்களிடம் சர்வதேச மன்னிப்புச்சபை கோரிக்கைவிடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.