அவுஸ்திரேலியாவின் உள்விவகாரங்களில் தலையிடுவதாக குற்றச்சாட்டு -ஈரான் மறுப்பு

அவுஸ்திரேலியாவின் உள் விவகாரங்களில் ஈரான் தலையிட்டதாக அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளமைக்கு ஈரான் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவிற்கான ஈரான் தூதரகம் இதனை முற்றாக நிராகரிப்பதாக தெரிவித்துள்ளது.

ஆதாரங்களை முன்வைக்காமல் தெரிவிக்கப்பட்டுள்ள இந்த குற்றச்சாட்டுகள் ஈரான் வெளிநாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடுகின்றது என்ற சில நாடுகளின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளின் விளைவுகளை புலப்படுத்துகின்றன என ஈரான்  தூதரகம் தெரிவித்துள்ளது.

உரிய ஆலோசனைகளை கூட முன்னெடுக்காமல் இவ்வாறான குற்றச்சாட்டுகளை முன்வைப்பது நேர்மை நல்லெண்ணத்திற்கான அறிகுறியில்லை எனவும் ஈரான் தூதரகம் தெரிவித்துள்ளது.

ஈரானில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்களிற்கு ஆதரவாக அவுஸ்திரேலியாவில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்களை இலக்குவைத்து ஈரான் முன்னெடுத்த நடவடிக்கையை அவுஸ்திரேலியாவின் புலனாய்வு பிரிவினர் முறியடித்தனர் என உள்துறை அமைச்சர் கிளாரா ஓ நெய்ல் தெரிவித்துள்ளார்.

ஈரான் அவுஸ்திரேலிய பிரஜையொருவரின் வீட்டை வேவுபார்த்த நபர்களின்  நடவடிக்கையை அவுஸ்திரேலிய புலனாய்வு பிரிவினர் முறியடித்தனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட நபர்கள் ஈரான் அவுஸ்திரேலிய பிரஜையின் வீட்டை வேவுபார்த்தனர் குடும்பஙகளை பின்தொடர்ந்தனர் எனவும்  உள்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

எங்களின் புலனாய்வு பிரிவினர் அவற்றை உடனடியாக முறியடித்தனர் எனவும்  உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.