தமிழர்களின் அனைத்து வழிபாட்டு இடங்களும் பறிபோகும் நிலை-இரா.சாணக்கியன்

வழிபாட்டு இடங்களும் பறிபோகும்

வழிபாட்டு இடங்களும் பறிபோகும்: தமிழர்களை துன்புறுத்தும் வகையில் வனவளத்துறையினரும் தொல்பொருள் திணைக்களமும் செயற்படுவது மிகவும் கவலைக்குரிய விடயம் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

ஆயிரம் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் தமிழர்களும் தமிழ் பௌத்தர்களாக இருந்துள்ளார்கள் என்பதை வரலாறு கூறுகின்றது. ஆனால் இன்று பௌத்தமதம் என்றால் பெரும்பான்மையினத்துக்கு மட்டும் சொந்தமானது என்று பார்க்கும் நிலையென்பது மிகவும் கவலைக்குரியது எனவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பல்வேறு பகுதிகளுக்கும் விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன், அப்பகுதிகளில் மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து பொதுமக்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டார்.

மட்டக்களப்பு,போரதீவுபற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வேற்றுச்சேனைக்கு விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர்சாணக்கியன்,  அங்கு முன்னெடுக்கப்படும் மண் அகழ்வு நடவடிக்கைகள் குறித்து பார்வையிட்டதுடன் அது தொடர்பில் கிராம மக்களுடனும் கலந்துரையாடினார்.

அதனை தொடர்ந்து போரதீவுபற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட விவேகானந்தபுரம் அம்மன் குளம் கிராமத்தில் காணப்படும் மிகவும் பிரசித்தி பெற்ற புல்லுமலையிலல் அமையப்பெற்ற ஹீ சக்தி வேலாயுதர் ஆலய வளாகத்தில் திடிரென்று சென்ற தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்கள அதிகாரிகள் கிராம வாசிகளுக்கு தெரியப்படுத்தாமல் ” இவ்விடம் தொல்லியல்  இடம்” பதாகையை  நட்டு சென்றுள்ளனர.

இந்த மலையில் ஆதியாக முருக வழிபாடு இருந்ததாகவும் இந்த முருகன்  ஆலயத்தில் நேர்த்தியாக பல பக்த அடியார்கள் வந்து பூசை செய்வதாகவும் கடந்த சில மாதங்களுக்கு முன்பதாக சில பௌத்த மத பிக்குகள் வந்து பார்வையிட்டு சென்றதாகவும் அதன் பின்னர் தற்போது  இவ்வாறு தொல்லியல் இடமாக பதாகைகள் நடப்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதேபோன்று விவேகானந்தபுரம் பகுதியில் உள்ள 35குடும்பங்கள் கல்குவாரிகளில் கல் உடைத்து வாழ்வாதாரத்தினை முன்னெடுத்துவந்த நிலையில், தற்போது அவை நிறுத்தப்பட்டு அந்த கல்குவாரிகள் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் போரதீவுப்பற்று பிரதேச அமைப்பாளருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் இதனால் கடந்த காலங்களில் கல்குவாரி  வேலைசெய்து வந்த 35குடும்பங்களும் வாழ்வாதாரத்தினை இழந்துள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன், “தொல்பொருள் திணைக்களம் என்று கூறிவிட்டு அதற்குள் மக்கள் வரக்கூடாது என்று சொல்வதன் நோக்கம் அப்பகுதிக்குள் விகாரைகளை அமைப்பதற்காக கூட இருக்கலாம். இன்று கிழக்கு மாகாணத்தில் 1600க்கும் மேற்பட்ட இடங்கள் தொல்பொருள் திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப் பட்டுள்ளது. இவையணைத்தையும் அரசாங்கம் கையகப்படுத்தும் நிலையேற்பட்டால் தமிழர்களின் அனைத்து வழிபாட்டு இடங்களும் பறிபோகும் நிலையேற்படும்” என்றார்.

Tamil News