இலங்கை பாற்பண்ணை கைத்தொழிலை வலுப்படுத்த அமெரிக்க விவசாயத் திணைக்களத்துடன் ஒப்பந்தம்

அமெரிக்க விவசாயத் திணைக்களத்துக்கும் இலங்கையின் விவசாயத் திணைக்களத்துக்குமிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் (MOU) கைச்சாத்திடும் நிகழ்வு நேற்று 13நடைபெற்றது. இந் நிகழ்வில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் கலந்துகொண்டார். 

அமெரிக்க விவசாயத் திணைக்களத்தின் “Food for Progress” எனும் முன்முயற்சியில் பங்கேற்கும் இலங்கைப் பாற்பண்ணையாளர்களின் பால் உற்பத்தியை இரட்டிப்பாக்குவதை நோக்கமாகக் கொண்டே 27மில்லியன் டொலர் பெறுமதியான ஒரு செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இலங்கை அரசாங்கத்துடனான நெருங்கிய பங்காண்மையுடன், இச்செயற்திட்டம் 2017இன் பிற்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டதுடன் இச்செயற்திட்டத்தினால் ஏற்கனவே 25,000இலங்கை பாற்பண்ணையாளர்கள் பயனடைந்துள்ளனர்.

அவர்களின் பால் உற்பத்தி இதுவரை சராசரியாக 68வீதத்தினால் அதிகரித்துள்ளது. இலங்கையின் உணவுப் பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு உதவிசெய்வதற்கான அமெரிக்காவின் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக, 80,000இலங்கையர் இத்திட்டத்தின் மூலம் உதவிகளைப் பெறுவரென மதிப்பிடப்பட்டுள்ளது.

கோவிட்19 தொற்று உட்பட எதிர்பாராத தாமதங்களுக்குப் பின்னர், அமெரிக்க தூதரகம் மற்றும் இலங்கை விவசாயத் திணைக்களம் என்பன ஒப்பந்தத்தை நேற்று இறுதி செய்தன.  “இந்த 27 மில்லியன் டொலர் பங்களிப்பு, இலங்கையில் நிலைபேறான பொருளாதார அபிவிருத்தியை ஊக்குவிப்பதில் அமெரிக்கா கொண்டுள்ள பல வருட உறுதிப்பாட்டுக்கான ஒரு பிரதான உதாரணமாகும். இவ்வுதவி நாட்டின் பாற்பண்ணைக் கைத்தொழில் உற்பத்தியை கணிசமாக மேம்படுத்துவது மட்டுமன்றி – முன்னெப்போதையும் விட தற்போது அவ்வாறான மேம்பாடு மிகவும் முக்கியமானது – அது இலங்கையின் பாற்பண்ணையாளர்கள் போட்டியிடவும், வளர்ச்சியடையவும் மற்றும் செழித்தோங்கவும் அவசியமான வளங்களை அவர்களுக்கு வழங்குகிறது ” என அமெரிக்க தூதுவர் சங் குறிப்பிட்டார்.

Tamil News