மன்னார் மாவட்டம் உள்ளடங்களாக வடக்கில் ஓமிக்ரோன் திரிவுடையவர்கள் உள்ளார்களா என்பதை கண்டறிய பீ.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு சிறி ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் பரிசோதனைக்காக அனுப்பி வைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ரி.வினோதன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
“மன்னார் மாவட்டத்தில் நேற்றைய தினம் புதிதாக மேலும் 46 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 29 பேர் திருக்கேதீஸ்வரம் பகுதியில் உள்ள சிறுவர் இல்லத்தில் தங்கி இருந்து அயலில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கின்ற மாணவர்கள் என்பதுடன் இதில் பல்கலைக்கழக மாணவர்களும் உள்ளனர்.
இவர்களுடன் சேர்த்து டிசம்பர் மாதம் 7 நாட்களில் 118 கொரோனா தொற்றாளர்களும், மாவட்டத்தில் தற்போது வரை 3058 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் தற்போது வரை 29 கொரோனா மரணம் நிகழ்ந்துள்ளது.
குறிப்பாக உலகளாவிய ரீதியாக புதிய அச்சுறுத்தலாக வரக்கூடும் என எதிர் பார்க்கப்படுகின்ற ஓமிக்ரோன் திரிபு இலங்கையிலும் ஒருவருக்கு அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் குறித்த திரிபு இலங்கையிலும் பரவக்கூடிய சூழ்நிலையில்,மக்கள் இது தொடர்பில் விழிப்புணர்வுடன் நடமாடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
மன்னார் மாவட்டம் உள்ளடங்களாக வடக்கில் ஓமிக்ரோன் திரிபு குறித்து கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், பீ.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு சிறி ஜெயவர்த்தன புர பல்கலைக்கழகத்தில் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்படும். அதன் முடிவுகளில் இருந்து புதிதாக ஓமிக்ரோன் திரிபுடைய தொற்றாளர்கள் இருக்கின்றார்களா? என்பது தொடர்பில் கண்டறிய முடியும்.
அதே நேரம் மன்னார் மாவட்டத்தில் தற்போது டெங்கு தீவிரமாக பரவி வருகின்றது. தற்போது வரை மன்னார் மாவட்டத்தில் 83 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.