காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் நீதியைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை!

வடக்கிலும், தெற்கிலும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கான பொறிமுறை வலுப்படுத்தப்படும். இது விடயத்தில் விசாரணை நடத்தி நீதியைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது-
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணை சிறப்பாக நடைபெற்று வருகின்றது. வெளியில் தெரியாவிட்டாலும் உள்ளே விடயங்கள் காத்திரமாக நடைபெறுகின்றன.

மத்திய வங்கி பிணைமுறி மோசடி, தாஜுடீன் கொலை, லலித், குகன் காணாமல்ஆக்கப்பட்டமை தொடர்பான விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதனால் விசாரணைகள் தொடர்பில் குழப்பமடைய வேண்டாம்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இரு வருடங்களுக்கு முன்னர் இலங்கை தொடர்பில் தீர்மானமொன்று முன்வைக்கப்பட்டது. மனித உரிமை பாதுகாக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. எனவே, மனித உரிமைகளை பாதுகாப்பதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குவதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.  நிகழ்நிலைக் காப்பு சட்டத்தையும் மாற்றுவதற்கும் தீர்மானித்துள்ளோம். நீதி, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சு என மூன்று அமைச்சுகளையும் உள்ளடக்கிய வகையில் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது-என்றார்.