மத்திய வங்கி ஆளுநர் தலைமையில் IMF உடன் கலந்துரையாட இலங்கை குழு அமெரிக்காவிற்குப் பயணம்

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உத்தேச கடன் வசதிகள் தொடர்பில் அதன் அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதற்காக, இலங்கை பிரதிநிதிகள் குழுவொன்று அமெரிக்கா செல்லவுள்ளது.

அடுத்த மாதம் 6ஆம் திகதி வொஷிங்டன் செல்லவுள்ள அவர்கள், அங்கு மேலதிக கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளனர்.

இந்த கலந்துரையாடலில் மத்திய வங்கியின் ஆளுநர் உள்ளிட்ட அரசாங்க பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளனர். டொலர் நெருக்கடி காரணமாக பொருளாதார சவால்களை எதிர்கொண்டுள்ள இலங்கைக்கு, 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் நீண்டகால கடன் வசதிக்கான பணிக்குழாம் மட்ட உடன்பாடு அண்மையில் எட்டப்பட்டது.

இந்த தொகையானது 4 வருட காலப்பகுதியில் எட்டு தவணைகளாக இலங்கைக்கு வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த ஆண்டு ஏப்ரல் 12ஆம் திகதியிலிருந்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள வெளிநாட்டுக் கடனை செலுத்துவது தொடர்பான மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தின் உடன்படிக்கைகள் மற்றும் முன்னேற்றம் குறித்தும் இந்தக் கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளது.

அதன்படி, கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பான அறிக்கையை இன்று முன்வைக்க நிதியமைச்சு திட்டமிட்டுள்ளது.