முதலீடுகளை மேற்கொள்ளும் நோக்கில் புலம்பெயர் கனேடிய வர்த்தகப்பிரமுகர்கள் குழு இலங்கை வருகை

இலங்கை பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் அழைப்பை ஏற்று இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வது பற்றிய கலந்துரையாடல்களை முன்னெடுக்கும் நோக்கில் கனேடிய வர்த்தகப் பிரமுகர்கள் குழுவொன்று நேற்று முன்தினம்   நாட்டை வந்தடைந்துள்ளது. 

மிகமோசமான பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் இலங்கையின் மீட்சிக்கு உதவும் வகையில் புதிய முதலீடுகளை மேற்கொள்ளல், சிறிய மற்றும் நடுத்தரளவிலான வணிகங்களுக்கு அவசியமான ஆலோசனைகளை வழங்கல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராயும் நோக்கில்  இந்த குழு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

சுமார் ஒருவாரகாலம் நாட்டில் தங்கியிருந்து பல்வேறு தரப்பினருடனும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவுள்ள இக்குழு, பொருளாதார மீட்சி மற்றும் பொருளாதார சமத்துவம் ஆகியவற்றின் ஊடாகவே அரசியல் ரீதியான சமத்துவத்தைத் தோற்றுவிக்கமுடியும் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளது.