மட்டக்களப்பு காத்தான்குடி காவல்துறைப் பிரிவிலுள்ள புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் 16 வயதுடைய சிறுமி ஒருவர் உறவினர் வீட்டுக்கு ஆடை தைப்பதற்காக சென்ற நிலையில், காணாமல் போயுள்ளதாக சிறுமியின் குடும்பத்தினர் காத்தான்குடி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புதுக்குடியிருப்பு புளியடி வீதியைச் சோந்த 16 வயதுடைய சிறுமியான தவராசா சசீக்கா என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
குறித்த சிறுமியின் தந்தையார் இல்லாத நிலையில் தாயார் வேறு திருமணம் செய்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சிறுமியும் அவரது சகோதரியும் அவர்களுடைய அம்மம்மாவின் பராமரிப்பில் வாழ்ந்து வருவதாகவும் சம்பவ தினமான கடந்த 18ம் திகதி சிறுமியின் சகோதரி வேலைக்கு சென்ற நிலையில், பிற்பகல் 1.30 மணியளவில் உறவினரின் வீட்டில் ஆடை தைப்பதற்கு செல்வதாக அம்மம்மாவிடம் தெரிவித்து வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
இந்த நிலையில் இரவாகியும் சிறுமி வீடு திரும்பாததை அடுத்து உறவினர் வீடுகளில் தேடிய பின்னர், சிறுமி காணாமல் போயுள்ளதாக காவல் நிலையத்தில் சிறுமியின் அம்மம்மா முறைப்பாடு செய்துள்ளர்.
இது குறித்த மேலதிக விசாரணைகளை காத்தான்குடி காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.