Tamil News
Home செய்திகள் இலங்கையில் நியாயமான அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் – சித்தார்த்தன்

இலங்கையில் நியாயமான அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் – சித்தார்த்தன்

வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் இலங்கையில் முதலீடு செய்ய வேண்டுமாயின் நாட்டில் நியாயமான அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.

தமிழ் தரப்பினர்  அரசியல் கட்சி பேதங்களை விடுத்து அரசியல் தீர்வு விடயத்தில் ஒன்றுபட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்ளைகள் அமைச்சு, முதலீட்டு மேம்பாடு ஆகிய அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

நாடு பொருளாதார ரீதியில் மோசமாக பாதிக்கப்பட்ட பின்னணியில் பாராளுமன்றத்தின் ஊடாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரச தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.

ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்யப்பட்ட போது, பொருளாதார நெருக்கடிக்கு ஓரளவு தீர்வு எட்டப்பட்டு, வரிசை யுகம் கட்டம் கட்டமாக முடிவுக்கு கொண்டு வரப்படும் என மக்கள் எதிர்பார்த்தார்கள். மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறியுள்ளது.

நடைமுறையில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண பிரதமர் உட்பட அமைச்சரவை ஒத்துழைப்புடன் செயற்படுகிறது என்பதை குறிப்பிட வேண்டும்.

நிலையான பொருளாதார மீட்சிக்கான திட்டங்கள் முறையாக செயற்படுத்தப்படவில்லை. நாட்டில் பணவீக்கம் தற்போது குறைவடைந்துள்ளது, இருப்பினும் அத்தியாவசிய பொருட்களின் விலை சடுதியாக உயர்வடைந்துள்ளது.

பூகோள ரீதியான காரணிகள் தற்போதைய பொருளாதார பாதிப்புக்கு ஒரு காரணம் என்று குறிப்பிடுவதை மறுக்க முடியாது.

தேசிய கொள்கை வகுத்தலில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களின் பங்களிப்பு கிடையாது. தேசிய கொள்கை வகுப்பில் தெற்கு அரசியல் கட்சிகள் முன்னிலையில் இருந்து செயற்படுகின்றன.வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் பிரதிநிதிகளின் ஆலோசனைகள் கோரப்படுவதில்லை.

வடக்கு மாகாணத்தில் ஒருகாலத்தில் மீன்பிடி மற்றும் உற்பத்தி கைத்தொழில் முன்னேற்றமடைந்திருந்தது. மொத்த மீன்பிடியில் மூன்றில் இரண்டு பங்கு நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு விநியோகிக்கப்பட்டது.

இந்த முன்னேற்றம் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டது. இருப்பினும் யுத்தம் முடிவடைந்ததன் பின்னரும் இந்த துறைகள் மீள கட்டியெழுப்பப்படவில்லை. நாட்டின் உற்பத்தி துறைகள் முறையாக மறுசீரமைத்தால் பொருளாதார ரீதியில் முன்னேற்றமடையும்.

பொருளாதார பாதிப்புக்கு தீர்வு காண வேண்டுமாயின் நாட்டு மக்கள் அனைவரையும் ஒன்றிணைத்த வகையில் தேசிய கொள்கை வகுக்கப்பட வேண்டும் என்றார்.

Exit mobile version