வடமராட்சி கிழக்கில் போஷாக்கின்மையால் உயிரிழந்த குழந்தை

யாழ். வடமராட்சி கிழக்கில் போஷாக்கு இன்மையால் குழந்தை உயிரிழந்தமை பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்துள்ளது.

இது அந்தப் பகுதியில் பெரும் அதிர்வலையையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

வடமராட்சி கிழக்கு – குடத்தனையைச் சேர்ந்த பிறந்து 52 நாட்களேயான குழந்தை ஒன்று மயக்கமுற்ற நிலையில் கடந்த திங்கட்கிழமை பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது.

மறுநாள் செவ்வாய்க்கிழமை அதிகாலை அந்தக் குழந்தை உயிரிழந்தது. குழந்தையின் மரணம் தொடர்பாக அப்பகுதிக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி திருமதி அன்ரலா வின்சன்தயான் விசாரணை நடத்தி உடல்கூறாய்வு பரிசோதனைக்கு உத்தரவிட்டார். உடல்கூறாய்வு பரிசோதனையில் போஷாக்கு இன்மையாலேயே குழந்தை உயிரிழந்ததாகத் தெரிய வந்தது.

இந்தச் சம்பவம் வடமராட்சிப் பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பொருளாதார நெருக்கடியால் கர்ப்பிணித் தாய்மார், குழந்தைகளின் போஷாக்கு விடயத்தில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஓர் உதாரணமாகி யுள்ளது என்று சுகாதாரத் தரப்பினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.