பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை பேரணி தொடர்பாக செய்தி செய்தி சேகரிக்கச் சென்ற இரு ஊடகவியலாளர்களுக்கு எதிராக பொத்துவில் நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதேபோன்று சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், அரசியல் பிரதிநிதிகள், அரசியல் கட்சி அங்கத்தவர்கள், காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் உறுப்பினர்கள் என 32 பேருக்கு பொத்துவில் நீதவான் நீதிமன்றில் இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கட்ந்த 2021, பெப்ரவரி 03ஆம் திகதி பொத்துவிலில் இருந்து பொலிகண்டி வரையான பேரணியில் கலந்து கொண்டமைக்கு எதிராகவே இந்த இரண்டு வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டு அது நேற்று வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
பொத்துவில் காவல்துறையினர் தாக்கல் செய்த வழக்கு மற்றும் திருக்கோயில் காவல்துறையினர் தாக்கல் செய்த வழக்கு என இரண்டு வழக்குகளுமே பொத்துவில் மாவட்ட நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
குறித்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சுதந்திர ஊடகவியலாளரும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளருமான செ.நிலாந்தன் மற்றும் இணைய ஊடகவியலாளர் சயனோலிபவனை ரூபா ஐந்து இலட்சம் சுய பிணை வழங்கி விடுதலை செய்ததோடு, வழக்கை எதிர்வரும் 2022, மார்ச் 02ஆம் திகதி வரை ஒத்திவைக்க நீதிவான் உத்தரவிட்டார்.
செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்கள் மீது வழக்கு தாக்கல் செய்துள்ளமை என்பது இந்த நாட்டில் ஊடக சுதந்திரம் என்பது இல்லை என்பதையே காட்டுகிறது என ஊடகவியலாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.