Home செய்திகள் தமது உயிரைப் பணயம் வைத்து போராடும் மக்களுக்கு உதவுங்கள் – அனைத்துலக சமூகத்திடம் அனைத்துலக ஈழத்தமிழர்...

தமது உயிரைப் பணயம் வைத்து போராடும் மக்களுக்கு உதவுங்கள் – அனைத்துலக சமூகத்திடம் அனைத்துலக ஈழத்தமிழர் உரிமை மையம் கோரிக்கை

உலகின் நீதிக்கும் அமைதிக்கும் உழைக்கும் உங்களிடம் இலங்கையில் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது தங்கள் குடும்ப உறுப்பினர்களின் காணாமல்போன நிலை குறித்த உண்மையை அறியவும் நீதியைப் பெறவும் நட்டஈடுகளை அடையவும் போராடும் உலகால் மறக்கப்பட்ட மக்களாக உள்ள தமிழ்த்தாய்மாருக்கும் தந்தைமாருக்கும் கிட்டிய குடும்ப உறுப்பினர்களுக்கும் உங்களால் இயன்ற உதவியினை உடன் செய்யுமாறு அனைத்துலக வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினமாகிய இன்று (30) மனிதாயத்தின் பேரால் பணிவன்பாக வேண்டுகின்றோம் என அனைத்துலக ஈழத்தமிழர் உரிமை மையம் அனைத்துலக மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் பிரித்தானியா அரசு ஆகியவற்றிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அனைத்துலக ஈழத்தமிழர் உரிமை மையத்தின் இந்த கோரிக்கை மனுவின் ஆங்கில வடிவமானது அனைத்துலக மன்னிப்புச் சபை, அனைத்துலக மனித உரிமைகள் கண்காணிப்பகம், ஐக்கிய நாடுகள் சபையின் ஐரோப்பிய ஒன்றிய அலுவலகம், பிரித்தானியா நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரித்தானியா பிரதமர் அலுவலகம் மற்றும் பிரித்தானியாவின் அங்கிலிக்கன் திருச்சபை ஆகியோரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

சமர்ப்பிக்கப்பட்ட மனுவின் முழு வடிவம் வருமாறு:

மறக்கப்பட்ட மக்களாக 900 நாட்களுக்கு மேலாக வலுக்கட்டாயமாக காணாமலாக்கப்பட்ட தங்கள் குடும்பத்தினர்க்காகப் போராடும் தமிழ்த்தாய்மார்களுக்கு உதவ முன்வாருங்கள்

ஐக்கியநாடுகள் சபையின் 8வது அனைத்துலக வலுக்கட்டாயமாகக் காணாமலாக்கப்பட்டோர் தினமாகிய இன்று (30.08.2019) இலங்கை அரசாங்கத்தின் ஆயுதப்படைகளால் 11.07.1979 அன்று அன்றைய இலங்கை அரச அதிபர் ஜே.ஆர்.ஜயவர்த்தனா தனது மருமகனான பிரிகேடியர் வீரதுங்காவுக்கு கண்ட இடத்தில் சுடவும் சுட்ட உடலை விசாரணையின்றி அழிக்கவும் பயங்கரவாதச்சட்டத்தால் அனுமதி அளித்த மூன்றாம் நாள் 14.07.1979 அன்று யாழ்ப்பாணத்தில் ஆறுபேர் படைகளால் அழைத்துச்செல்லப்பட்டுக் காணமாலாக்கப்பட்டது முதல் கடந்த நாற்பது ஆண்டுகளாக அடுத்தடுத்துத் தொடர்ச்சியாக மனிதாயத்திற்கு எதிரான குற்றமாகிய வலுக்கட்டாயமாகக் காணாமாலாக்கப்படுதல் இலங்கைத் தமிழர்களின் அரசியல் பணிவை அச்சுறுத்தல் மூலம் பெறும் அரசின் தந்திரோபாயமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அன்று முதல் காணாமலாக்கப்படும் செயல்களால் வடக்கு கிழக்கின் பலபகுதிகளிலும் பாதிப்புக்குள்ளாகி வந்த ஈழத்தமிழர்கள் 2009 இல் முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு யுத்தத்தால் பல்லாயிரக்கணக்கில் மேலும் பாதிப்புற்று இன்றுவரை உண்மைகள் வெளிப்படுத்தப்படுதலோ பொறுப்புக்கூறலோ அற்ற நிலையில் நீதிவிசாரணைகள் எதுவும் தகுந்த முறையில் நடைபெறாத சூழலில் தொடர்ந்து துன்புற்று வருவதை ஒன்றிய அரசியல் இனத்துவச் சிறுபான்மையினமாக வாழும் பிரிட்டிஸ் தமிழர்களாகிய நாங்கள் உங்கள் கவனத்துக்குக் கொண்டு வர விரும்புகின்றோம்.

2015ம் ஆண்டில் இலங்கைக்குச் சென்ற ஐக்கியநாடுகள் சபையின் வலிந்து அல்லது விருப்புக்குமாறாக காணாமலாக்கப்படல் தொடர்பாக ஆராயச் சென்ற குழுவினர் “உண்மைகளையும் நீதியினையும் அடைவதற்கான பாதை நீண்டதாகவும் துன்பங்களைத் தருவதாகவும் இருப்பினும் அதுவே செல்வதற்கான ஒரே முறைமையான பாதை” எனக் கூறியும் இணக்கப்பாட்டுடனும், பொறுப்புக்கூறலுடனும், மனித உரிமையைப் பேணல் உடனும் பயணிப்பதற்காக, ஐக்கியநாடுகள் சபையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானத்தை நிறைவேற்றி, நான்கு அமைப்புக்களான. சிறப்பு வழக்குத் தொடுப்பவர் அலுலகத்துடன் கூடிய சிறப்பு நீதிமன்றம், உண்மை-நீதி- இணக்கப்பாடு- மீளவும் வன்முறைகள் நிகழாமை ஆகியவற்றுக்கான ஆணையகம், நட்டஈடு வழங்கு அலுவலகம், காணாமலாக்கப்பட்டவர் விடயங்களுக்கான அலுவலகம் என்பவற்றை நிறுவ வழிப்படுத்தியது” என 2017இல் அனைத்துலகச் செஞ்சிலுவைச் சங்கத்தின் ஆய்வறிக்கையான சிறிலங்காவின் காணாமல் போனவர்களுக்கான அலுவலகம்: ஒன்றன் பின் ஒன்றாக நீதி (The Sri Lankan office on Missing Persons : Justice in Tandem) என்பதை எழுதிய கொழும்பை மையமாகக் கொண்ட தெற்காசிய சட்ட ஆய்வு மையத்தின் ஆய்வாளரான முனைவர் இசபெல்லா லஸ்சி  (Isabelle Lasse) தெரிவித்துள்ளார்.

ICETR dissapeared தமது உயிரைப் பணயம் வைத்து போராடும் மக்களுக்கு உதவுங்கள் - அனைத்துலக சமூகத்திடம் அனைத்துலக ஈழத்தமிழர் உரிமை மையம் கோரிக்கைஆயினும்  படையினர் குற்றவாளிகளாகக் காணப்பட்டால் அத்தகையவரை அடுத்து என்ன செய்வது என்பதற்குத் தெளிவான வழிகாட்டல்கள் இல்லாத காணாமல் போனவர்களுக்கான (Office on Missing Person) அலுவலகமாகவே இது அமைக்கப்படுவது மேம்பாடான அலுவலகமாகவும் குற்றவியல் நீதிச் செயற்பாட்டுகளுடன் தொடர்பற்றதாகவும் அமைக்கப்படுகிறது என்பதைச் சுட்டிக்காட்டினார். ஆயினும் சிறிலங்கா எந்த வழிகாட்டல்களுக்கும் தலைசாய்க்காது காணாமல் போனவர்களுக்கான அலுவலகம் திறக்கும்  பாராளமன்றத் தீர்மானத்தை ஏப்ரல் 2016இல் நிறைவேற்றி பங்குனி 2018இல் அலுவலகத்தைத் திறந்துள்ளது  என்பதே சமகால வரலாறாக உள்ளது.

இதுவரை சிறிலங்கா அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்குப் பலத்த ஏமாற்றத்தை ஏற்படுத்துவதுடன் இந்தக் கால இடவெளியில் உண்மைகள் வெளிவராதவாறு காணாமலாக்கப்பட்டவர்களுக்கான மரணச்சான்றிதழ்களைப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் திணிப்பதே உள்நோக்காக இருப்பதாகப் பல ஆய்வாளர்களும் சுட்டிக்காட்டுகின்றனர். இந்நிலையில் வலுக்கட்டாயமாகக் காணாமலாக்கப்பட்டவர்களுக்கான அனைத்துலகத் தினமான இன்று தங்கள் குடும்பத்தினரை எண்ணி ஏங்கித் துடித்துச் சாகாமல் செத்துக்கொண்டிருக்கும் மறக்கப்பட்ட தமிழ்க்குடும்பங்களின் சார்பாக இந்த மனுவை உங்களுடைய பார்வைக்குப் பணிவன்புடன் சமர்ப்பிக்க விரும்புகின்றோம்.

1999 ம் ஆண்டிலேயே பிபிசியின் 28.03.1999ம் திகதியச் செய்தி ஐக்கியநாடுகள் சபையின் ஆய்வின் படி உலகிலே அதி கூடிய வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரை ஈராக்குக்கு அடுத்ததாக 2வது நிலையில் கொண்டிருந்த நாடாக சிறிலங்காவை குறிப்பிட்டது. இதில் 1980 முதல்12000 பேர் சிறிலங்காப்படைகளால் காவலில் வைக்கப்பட்ட நிலையில் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாகவும் கடந்த 27 ஆண்டுகளில் 55000பேர் கொன்றழிக்கப்பட்டதாகவும் புள்ளிவிபரங்கள்தரப்பட்டிருந்தன. அச்செய்தியில் அப்போது ஆட்சியில் இருந்த சந்திரிகா குமரதுங்கா தலைமையிலான சிறிலங்கா அரசாங்கப் புள்ளிவிபரம் ஐக்கியநாடுகள் சபையின் ஆய்வை விட அதிக எண்ணிக்கையாகப் 17000 பேர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக ஏற்றுக்கொண்டுள்ளது என்பதையும் சுட்டிக்காட்டியது. பிபிசியின் இலங்கைக்கான செய்தியாளர் சூசானா பிரைஸ் அவர்களின் 05.03.1999ம் திகதியச் செய்தியினால் 1998 யூலைமாதத்தில் யாழ்ப்பாணக் குடாநாட்டில் செம்மணி என்னும் இடத்தில் 400க்கு மேற்பட்ட தமிழர்கள் சிறிலங்கா இராணுவத்தால் விசாரணைக்கெனக் கொண்டு செல்லப்பட்டுக் கொன்று புதைக்கப்பட்ட புதைகுழிகள் கண்டறியப்பட்டது என்பது பதிவிடப்பட்டது.

இது இலங்கையில் தமிழர்கள் வலிந்து காணாமலாக்கப்பட்டு வரும் மனிதாயத்திற்கு எதிரான குற்றச்செயல் தொடர்ந்து நடைபெற்று வந்தமையை நிரூபித்தன. 10.11.1999இல் பிபிசியின் தென்னாசியச் செய்தியாளர் அல்ஸ்டயார் லோசனால் “வெல்லப்பட முடியாத யுத்தம்”  எனச் சுட்டிக்காட்டிய யுத்தத்தை யுத்தக்குற்றச்செயல்கள் மூலமும் மனிதாயத்திற்கு எதிரான குற்றங்கள் மூலமும் சிறிலங்காப்படையினர் 19.05.2009 இல் பத்தாண்டுகளின் பின்னர் முடிவுக்குக் கொண்டு வந்த பொழுது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொகை பல்லாயிரக்கணக்கில் அதிகரித்து இன்றுவரை எவ்வளவு எனச் சிறிலங்கா அரசாங்கத்தால் பொறுப்புக்கூற முடியாதுள்ளது என நோர்வே மனிதஉரிமைப் பாதுகாப்பு நிதிய ஆதரவில் இலங்கையில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பேரவையுடன் களஆய்வு செய்துவரும், அரசியலுக்கும் பொருளாதாரத்திற்குமான இலண்டன் பல்கலைகழகப் பள்ளியின் பெண்கள், அமைதி மற்றும் பாதுகாப்பு மையத்தின்  (Centre for Women, Peace and Security, London School of Politics and Economics) வருகை ஆய்வாளர் யோலண்டா போஸ்டர் (Yolanda Foster) அவர்கள் “ சிறிலங்காவில் பாதுகாப்புப் படைகளினால் காணாமலாக்கப்பட்டோர் எவ்வளவு என யாருக்கும் தெரியவில்லை எனவும் ஆனால் பல்லாயிரக்கணக்கு என்பது மட்டும் உறுதியெனத் தனது கள ஆய்வுச் செய்திக் குறிப்பான “ சிறிலங்காவில் காணாமலாக்கப்பட்டோரின் நீண்டகால நிழல்கள்” (The Long Shadow of Disappearences in Sri Lanka)  வில்  கூறியுள்ளார்.

முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் பொழுது தினம் 1000 பேர் வரை கொல்லப்பட்டதாகவும் ஏப்ரல் மாதத்திலேயே யுத்தசூன்யப் பிரதேசத்தில் 7000பேர் கொல்லப்பட்டதாகவும் 29.05.2009ம் திகதிய பிரித்தானிய நாளிதழான ‘த டைம்ஸ்’ பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது என விக்கிப்பீடியாச் செய்திகள்  தெரிவிக்கின்றன. அனைத்துலக மன்னிப்புச்சபையினர் “ 1980 முதல் உலகிலேயே அதிக எண்ணிக்கையான காணாமல்போக்கலைச் செய்த நாடாகச் சிறிலங்கா விளங்குகிறது எனவும் 60000 முதல் 100000 வரை அத்தொகை அமையலாமெனவும் இது சிறிலங்காவில் நீதிபரிபாலனம் முறிவுற்ற நிலையில் இருப்பதை எடுத்துக்காட்டுகிறதெனவும், இதனால் இன்றுவரை தங்கள் அன்புக்குரிய குடும்ப உறுப்பினர்களுக்கு என்ன நடந்தது எனத் தெரியாது ஏங்கித் தவித்துக் கொண்டிருக்கும் குடும்பங்கள் இலங்கையில் மிக அதிகம் எனவும், 18.05.2019 ம் திகதிய சிறிலங்கா: தண்டனைகளிலிருந்து விலக்களித்தல் வன்முறைகளின் மறுநிகழ்வுக்குத் தூபமிடுகிறது  (Sri Lanka : Impunity fuels recurrence of violence) என்னும் அறிக்கையில்  குறிப்பிட்டுள்ளனர். அனைத்துலக மன்னிப்புச் சபையினர் 18.05.2018இல் “சிறிலங்கா: வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் பட்டியவை வெளியிடுக  (Sri Lanka :Release lists of the forcibly disappeared) என விடுத்த கோரிக்கையில் “போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட 9வது ஆண்டு நிறைவுற்ற நிலையில் காணாமல் போனவர்கள் குறித்த தகவல்களை அவர்களின் குடும்பத்தினர்க்கு வழங்குவதுடன் போரின் இறுதிக்கட்டத்தில் இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்களின விளக்கமான விபரப் பட்டியலை வெளியிடுமாறும் அனைத்துலக மன்னிப்புச் சபை கோருகிறது.

யூன் மாதம் 2017ம் ஆண்டு இலங்கையின் அரச அதிபர் மைத்திரிபால சிறிசேனா பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களின் மனக்குறைகளைத் தாம் ஏற்றுக் கொள்வதாகவும் விபரப்பட்டியலை வெளியிடுமாறு தேசிய பாதுகாப்புச் சபைக்குத் தாம் அறிவுறுத்துவதாகவும் நம்பிக்கை வாக்குறுதி அளித்தார். தப்பிப்பிழைத்திருக்கும் குடும்ப உறுப்பினர்களின் தகவல்களின்படி நூற்றுக்கு மேற்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கப் போராளிகள் வட்டுவாய்க்கால் பாலத்திற்கு அருகில் இராணுவத்தினரிடம் சரணடைந்துள்ளனர். கிடைத்துள்ள மற்றோர் அறிக்கைப்படி கத்தோலிக்க குருவான அருட்திரு. பிரான்சிஸ் யோசப் அவர்கள் தலைமையில் சரணடைந்த மற்றோர் தொகுதியினரும் அவருடன் சேர்த்துக் காணாமலாக்கப்பட்டுள்ளனர்.

கண்கண்ட சாட்சிகளின்படி சரணடைந்தவர்கள் இராணுவப்பாதுகாப்புடன் அணி அணியினராக பேருந்துகளில்ட அழைத்துச் செல்லப்பட்ட பின்னர்இவர்களுக்கு என்ன நேர்ந்ததென இதுவரை தெரியாதுள்ளது. இந்த திரள்நிலையான வலிந்து காணாமலாக்கப்படுதல்களை குறித்து 2017ல் அனைத்துலக மன்னிப்புச்சபை “ எங்கள் புண்களை நீதியால் மட்டுமே குணமாக்க முடியும்: சிறிலங்காவில் காணாமலாக்கப்பட்ட குடும்பங்களின் கோரல்களைக் கேளுங்கள்” (Only Justice Can Heal Our Wounds: Listening to the Demands of Families of Disappeared in Sri Lanka) என்ற தலைப்பில் வெளியிட்ட அறிக்கையில், ‘ திரளாகப் போரின் முடிவில் காணாமலாக்கப்பட்டமை செயற்படுத்தப்பட்ட விதங்கள் திட்டமிட்ட முறையில் வலிந்து ‘காணாமலாக்கப்படுதல்” நிறுவனமாக்கப்பட்ட ஒன்றாக உள்ளது என்பதற்கான வெளிப்படையான சுட்டுதலாக அமைகிறது.

அரசாங்கம் காணாமலாக்கப்பட்டவர்கள் எங்கு உள்ளனர் அல்லது அவர்களுக்கு என்ன நடந்தது என்ற தகவல்களை மறைப்பது குற்றச்செயல்களைத் தூண்டுவதற்கான பொறுப்பாளராக அரசை கருதவைக்கிறது” என வெளிப்படையாகக் குற்றம்சாட்டியிருந்தது. 2013ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் கடைசியாக சிறிலங்கா இராணுவத்தின் 58வது பிரிவின் பாதுகாப்பில் காணப்பட்ட 13 பேர் குறித்து சிறிலங்கா நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுவுக்கு (Habeas Corpus), பெப்ருவரி 2016 இல் மேஜர் ஜெனரல் கவிந்த சாணக்கிய குணவர்த்தனாவுக்கு முல்லைத்தீவு மஜிஸ்ரேட் நீதிமன்றம் 19.04.2016இல் சமுகமளித்துப் பட்டியலைத் தாக்கல் செய்யுமாறு பணித்தது. ஆயினும் இரண்டு தவணைகள் கொடுத்தும் பட்டியலைச் சமர்ப்பிக்கத் தவறியமையால் செப்டெம்பர் 2016இல் குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு குற்றவியல் விசாரணை செய்யுமாறு நீதிமன்றம் ஆணையிட்டது. இதற்கு அரசாங்கம் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டவர்களின் பட்டியலே இராணுவத்திடம் உள்ளது மற்றையவர்கள் சரணடைந்த பொழுது பட்டியலிடப்படவில்லை என இறுதியாகப் பதிலளித்தது”. என அனைத்துலக மன்னிப்புச்சபை தனது இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியது.

கூடவே முப்படைகளின் தலைவரும், தேசிய பாதுகாப்புச் சபையின் தலைவருமான அரச அதிபர் ஆயுதப்படைகளிடம் சரணடைந்தவர்களின் பட்டியலை வெளியிடுமாறு தாம் பணிப்பதாக வாக்குறுதி அளித்த போதிலும் இவ் அறிக்கை வெளிவரும்வரை 11 மாதங்கள் எதுவும் நடக்கவில்லை எனவும் குறிப்பிட்டிருந்தது. போரின் இறுதிக்கட்டத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் குறித்து  தாயகத்திலும் வெளிநாடுகளிலும் ஐ.நா. மனிதஉரிமைகள் ஆணையாளர் அலுவலகத்திலும், அரசாங்கம் நியமித்த கற்றுக்கொண்ட பாடங்களும் மறுவாழ்வும் ஆணையக சரணடைந்து அல்லது கைதுசெய்யப்பட்டுக் காணாமலாக்கப்பட்டவர்களின் பிரதநிதிகள் பிரதநிதிகள் அமர்விலும் தொடர்ச்சியாக முறையீடுகள் தாக்கல் செய்யப்பட்டு வந்துள்ளன. இந்த முயற்சிகளின் வழி மார்ச் 2018இல் காணாமல் போனவர்களுக்கான அலுவலகம் ஒன்று திறக்கப்பட்டாலும் காணாமலாக்கப்பட்டோரின் குடும்பத்தினர் உண்மைகளைத் தேடும் முயற்சிக்கு கடந்த பத்தாண்டாக சிறிலங்கா அரசாங்கம் பெரிதளவில் ஊக்கமளிக்காதிருப்பதாகவும் அனைத்துலக மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் பாதிப்புற்று குடும்பங்களில் பெண்களே தங்களுக்கான உண்மைகளை வெளிப்படுத்தும்படியும் நீதியை வழங்குமாறும் மறுவாழ்வை சீரமைக்குமாறும் முன்னணிப் போரட்டங்களை சனநாயக வழிகளில் நடத்த வேண்டிய நிலை இலங்கையில் காணப்படுகிறது என நோர்வேயின் மனிதஉரிமை பாதுகாப்பு ஆய்வுத்திட்டத்தில் இலங்கை நிலை குறித்த ஆய்வாளராக யோலண்ட் போஸ்டர் தனது “ சிறிலங்காவில் காணாமலாக்கப்பட்டோரின் நீண்டகால நிழல்கள்” (The Long Shadow of Disappearences in Sri Lanka) என்னும் களஆய்வுக் குறிப்பில் தெரிவித்துள்ளதுடன் இப்பெண்கள் பாலியல் ரீதியாகவும் படைபல ரீதியாகவும் அச்சுறுத்தல்களை எதிர் கொண்டு போராட வேண்டியுள்ளதால் கூட்டுச் செயற்திட்டம் (Collective Action) ஒன்று அவர்களுக்குப் பக்கத்துணையாக அமைய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். தற்பொழுது யாழ்ப்பாணத் தாய்மார் முன்னணியும் தென்னிலங்கைத் தாய்மார் முன்னணியும் சிலவிடயங்களில் இணைந்து குரல் எழுப்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி, மாடன்கேணி, வவனியா முதலதக பகுதிகளில் 2018ம் ஆண்டு பெப்ருவரி முதலாகத் தொடராகவும் சுழற்சி முறையிலும் நடைபெற்று வரும் காணாமலாக்கப்பட்டோர் குறித்த உண்மைகளை கண்டறியவும் நீதிவிசாரணைகளை நடாத்துவிக்கவும், வாழ்வின் கட்டமைப்புக்களை மறுசீரமைக்கவும் நடாத்தப்பட்டு வரும் தாய்மார்களின் இப்போராட்டம் 900 நாட்களைத் தாண்டிய நிலையிலும் ஆண்களும் பெண்களுமாகப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 20 பேருக்கு மேல் தங்கள் பிள்ளைகளைக் கணவரைக் குறித்த விபரங்களை அறியாமலே மரணித்து விட்ட நிலையிலும் இவர்களது இந்த உண்மைக்கான நீதிக்கான கோரிக்கை உலகின் கவனத்தை உரிய முறையில் பெறவில்லை என்பதை இன்று அனைத்துலக வலுக்கட்டாயமாகக் காணாமலாக்கப்பட்டோர் தினத்தில் மிகுந்த கவலையுடன் உங்கள் கவனத்திற்கு தெரிவிக்க விரும்புகின்றோம்.

இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைச் சபையின் தலைவி மிசல் பக்லட் (Michelle Bachelet) அவர்கள் “ பெரும் குழப்பநிலையை உருவாக்குகிறது”  என 19.08.2019 இல் குறிப்பிடும் அளவுக்கு, யுத்தக்குற்றச் செயல்கள் பலவற்றுக்கும் மற்றும் மனிதாயத்திற்கு எதிரான குற்றங்கள் பலவற்றுக்கும் பொறுப்பாளர் எனப் பல ஐக்கியநாடுகள் சபையின் அறிக்கைகளால் கருதப்படும் சிறிலங்கா இராணுவ 58வது பிரிவுக்குப் போரின் இறுதிக்காலத்தில் தளபதியாக இருந்த சவேந்திர சில்வாவை சிறிலங்கா இராணுவத்தளபதியாக சிறிலங்காவின் அரச அதிபர் நியமித்துள்ளமை சிறிலங்கா காணாமலாக்கப்பட்டவர்களுக்கான உண்மைகளை வெளிப்படுத்தும் பொறுப்புக்கூறலோ அல்லது பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி வழங்கலையோ செய்யாது என்பதையும் அனைத்துலக வழிகாட்டல்கள் எதற்கும் தலைசாய்க்காது என்பதையும் தற்போது மீளவும் உறுதிப்படுத்தியுள்ளது.

எனவே உலகின் நீதிக்கும் அமைதிக்கும் உழைக்கும் உங்களிடம் இலங்கையில் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது தங்கள் குடும்ப உறுப்பினர்களின் காணாமல்போன நிலை குறித்த உண்மையை அறியவும் நீதியைப் பெறவும் நட்டஈடுகளை அடையவும் போராடும் உலகால் மறக்கப்பட்ட மக்களாக உள்ள தமிழ்த்தாய்மாருக்கும் தந்தைமாருக்கும் கிட்டிய குடும்ப உறுப்பினர்களுக்கும் உங்களால் இயன்ற உதவியினை உடன் செய்யுமாறு அனைத்துலக வலுக்கட்டாயமாகக் காணாமலாக்கப்பட்டோர் தினமாகிய இன்று மனிதாயத்தின் பேரால் பணிவன்பாக வேண்டுகின்றோம்.

[1] http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/306447.stm

[2] http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/291320.stm

[3] http://news.bbc.co.uk/1/hi/special_report/1998/sri_lanka/183765.stm

[4] https://nhrf.no/article/2018/the-long-shadow-of-disappearances-in-sri-lanka

[5] https://en.wikipedia.org/wiki/Forced_disappearance#Sri_Lanka

[6] https://www.amnesty.org/en/latest/news/2019/05/sri-lanka-impunity-fuels-recurrence-of-violence/

[7] https://www.amnesty.org/en/latest/research/2018/05/sri-lanka-release-lists-of-the-forcibly-disappeared/

[8] https://news.un.org/en/story/2019/08/1044501

 

 

 

Exit mobile version