Tamil News
Home செய்திகள் தேசிய புலனாய்வு அமைப்பினர் 5 இடங்களில் சோதனை

தேசிய புலனாய்வு அமைப்பினர் 5 இடங்களில் சோதனை

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் கோவை உக்கடம், கோட்டைமேடு பகுதியில் வசிக்கும் 5பேரின் வீடுகளில் தேசிய புலனாய்வு அமைப்பின் அதிகாரிகள் இன்று வியாழக்கிழமை காலை சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் சமூகவலைத் தளத்தில் தொடர்புடையவர்கள் என்று கூறி ஏற்கனவே கடந்த ஜுன் மாதம் இதே பகுதியில் முகமது உசேன், ஷாஜகான், ஷேக் அப்துல்லா ஆகியோரின் இல்லங்களில் சோதனை செய்த அதிகாரிகள் அவர்களை கோவை பந்தைய சாலையில் உள்ள தமது அலுவலகத்தில் வைத்து விசாரணை செய்தனர்.

குறிப்பாக கடந்த வாரம் லக்ஷ்கர் ஈ தொய்பா அமைப்பின் உறுப்பினர்கள் இலங்கை வழியாக கோவைக்கு வந்திருப்பதாக கூறி கடந்த வாரம் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பலத்த சோதனை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. தற்போது தேசிய புலனாய்வு அமைப்பினர் இந்த சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

கோட்டைமேடு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மட்டும் 3 மணிநேரம் சோதனை மற்றும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து நடைபெற்ற சோதனை முடிவில் 5பேர் வீடுகளில் இருந்து 7 அரபு மொழிப் புத்தகங்கள், துண்டுப் பிரசுரங்கள், 7 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்த 5பேரையும் நாளை கொச்சி தேசிய புலனாய்வு அமைப்பின் அலுவலகத்தில் ஆஜராகும்படி கட்டளை அளிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

Exit mobile version