Tamil News
Home செய்திகள் தமிழின விடுதலை மீது தீராத பற்றுக்கொண்ட கோ.இளவழகன் காலமானார்

தமிழின விடுதலை மீது தீராத பற்றுக்கொண்ட கோ.இளவழகன் காலமானார்

தமிழின விடுதலைமீதும், தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மீதும் தீராத பற்றுக்கொண்டு செயற்பட்டு வந்த  தமிழ் மண் பதிப்பக நிறுவனர் கோ.இளவழகன் காலமானார்.

இவர் பிற மொழிகளில் உள்ள அரிய நூல்களை தமிழ் மொழியில் வெளியிட்டு பெருமை சேர்த்தவர். மேலும் தொல்காப்பியம் முழு பாகம், தமிழர்களின் இசை- இலக்கண தொகுப்பான தஞ்சை ஆபிரகாம் பண்டிதரின் கருணாமிர்த சாகரம் உள்ளிட்ட ஏராளமான  அரிய தமிழ் இலக்கிய ஆய்வு நூல்களை வெளியிட்டு தமிழ் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியவர்.

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரத்தநாடு இவரது சொந்த ஊர் தமிழீழ விடுதலையின் உறுதிப்பாட்டை ஐ.நா.மன்றத்தின் கதவுகளை தட்டுகின்ற அளவிற்கு போராட்டத்தை ஏற்படுத்திய தமிழீழ தேசியத் தலைவர் திரு.பிரபாகரனின் தலைமையை முழுமையாக ஏற்று, திரு.பழ நெடுமாறன் அவர்களின் வழிகாட்டுதலில் உலகத்தமிழ் பேரமைப்பின் பொதுச் செயலாளராக இருந்தார் கோ.இளவழகன்.

மொழிக்காகவும், இனத்திற்காகவும் பெரும் பங்காற்றிய அறிஞர்கள் நூல்கள் அனைத்தையும் ஒருசேரத் தொகுத்து காலவரிசையில் பொருள் வழி பிரித்து ஒரே வீச்சில் வெளியிட வேண்டும் என நினைத்தே தமிழ்மண் என்ற பதிப்பகத்தை நிறுவினர். இதுபோலவே பல தமிழ் இலக்கிய, இலக்கண நூல்கள் முழுவதையும் ஒரே வீச்சில் வெளியிட்டு பெருமை சேர்த்தவர்.

பாவாணர் நூற்றாண்டு விழாவில் மொழி நூல் கதிரவன், தேவநேயப் பாவாணர் அவர்கள் எழுதிய 53 நூல்களையும் ஒரே நேரத்தில் வெளியிட்டு தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றார். இந்த நிலையில், நீண்ட நாட்கள் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த அவர்,  இன்று காலமாகியுள்ளார்.  கோ.இளவழகன் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Exit mobile version