இந்தியாவில் மனித உரிமை மோசமடைந்து – ஐரோப்பிய ஒன்றியம் கவலை

இந்தியாவில் மனித உரிமை மோசமடைந்து வரும் சூழல் கவலையளிப்பதாக உள்ளது என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இந்தியா – ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாடு போர்ச்சுப்பலில் அடுத்த மாதம் நடைபெற உள்ள சூழலில், இரு நாடுகளின் உறவுகளைப் பலப்படுத்துவது குறித்து, அந்நாட்டின் வெளியுறவுத்துறை குழு அறிக்கை சமர்ப்பித்த நிலையில், அதில் இந்தியாவில் மனித உரிமை மோசமடைந்து வரும் சூழல் குறித்தும் தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த அறிக்கைக்கு ஆதரவாக 61பேரும் எதிராக 6 பேரும் வாக்களித்துள்ளனர். இந்நிலையில், வரும் மே 8 திகதி அன்று பிரதமர் நரேந்திர மோடி இந்தியா – ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டுக்காக போர்ச்சுக்கல் செல்ல உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த அறிக்கை இரு நாட்டு உறவுகளை வளர்ப்பது குறித்து பன்னாட்டு பாதுகாப்பு, உலகப் பொளாதார மேம்பாடு, காலநிலை மாற்றத்திற்கு எதிரான செயல்பாடுகள், பன்முக உறவுகளை வளர்த்தல் போன்றவற்றை குறித்து சமர்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த அக்குழுவின் உறுப்பினர்கள்,“ஐக்கிய நாடுகளவையின் மனித உரிமை ஆணையாளர் மற்றும் ஐக்கிய நாடுகளவையின் சிறப்புப் பிரதிநிதிகள் இந்தியாவில் மனித உரிமை மோசமடைந்துள்ளதை மேற்கோள்காட்டி கவலை அளிப்பதாக தெரிவித்துள்ளார்கள்.

மேலும்“ மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் இந்தியாவில் பணியிட பாதுகாப்பு இல்லை. இதே போலப் பெண்களுக்கும் சிறுபான்மையினருக்கும் அசாதாரண சூழல் நிலவுகின்றது என்றும், வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்கு முறை சட்டத்தை மீறியதாகக் கூறப்பட்ட நிலையில், மனித உரிமை செயற்பாட்டு அமைப்பான ஆம்னெஸ்டி இன்டர்நேஷல் அமைப்பு தனது அலுவலகத்தை மூடியுள்ளதையும் அந்தக் குழுவின் உறுப்பினர்கள் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

குடியுரிமை திருத்த சட்டம் இந்தியாவில் முஸ்லீம்களுக்கு எதிரான தீண்டாமை போக்கையும், பிளவுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொள்ளுவதாக ஐ.நா  அவையின் மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளதையும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் காஷ்மீர் விவகாரம் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் உற்றுநோக்கி வருவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நன்றி தி வயர்