Tamil News
Home செய்திகள் இனப்பரம்பலை மாற்றியமைக்கும் வகையில் சிங்களக் குடியேற்றங்கள்

இனப்பரம்பலை மாற்றியமைக்கும் வகையில் சிங்களக் குடியேற்றங்கள்

இலங்கையில்  வடக்கு, கிழக்கு மாகாணங்களில்  தமிழ் மக்களின் இனப் பரம்பலை மாற்றியமைக்கும் வகையில், திட்டமிட்டபடி பெரும்பான்மை இனத்தவர்களின்  குடியேற்றங்கள் இடம்பெற்று வருகின்றது.

மேலும் வடக்கு மற்றும் கிழக்கு மகாணங்களில் தொல்லியல் திணைக்களங்களால் தொல்லியல் ஆய்வு என்ற போர்வையில் தமிழ் மக்களின் காணிகள் அத் திணைக்களங்களின் கீழ் கொண்டுவரப்பட்டு பெரும்பான்மையின மக்களாகிய சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டு வருகின்றனர் என பல்வேறு தமிழ் கட்சிகள் குற்றம் சுமத்துகின்றன.

இதன் காரணமாக தமிழ் மக்கள்  தொடர்ந்து தமது பூர்விக நிலங்களை இழந்து, அகதிகளாக்கப்படும் சூழலை  எதிர்கொண்டுள்ளனர்.

போர் இடம்பெற்ற காலத்தில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் சிறீலங்கா படைத்தரப்பின் தேவைக்காக பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் தமிழ் மக்களின் நிலங்கள் அபகரிக்கப்பட்டன. யுத்தம் முடிந்த பின் சில காணிகளை படையினர் விடுத்திருந்த போதும் பெரும்பாலான மக்களின் வாழ்விடங்கள் தற்போது வரையில் விடுவிக்கப்படவில்லை.

இந்நிலையில், போர் காணமாக இடம்பெயர்ந்த மக்களும் அவர்களின் சொந்த இடங்களுக்கு இன்னும் திரும்பவில்லை. மீள்குடியேற்றம் செய்யப்பட்ட இடங்களிலும் மக்களின் அடிப்படை வசதிகள் இன்னும் நிறைவேற்றிக் கொடுக்கப்படவில்லை என்றும் மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

மேலும் தொல்லியல் ஆய்வை காரணம் காட்டி  குருந்தூர் மலை, வெடுக்குநாறி, நீராவியடி பிள்ளையார் என தொடங்கி அண்மையில் கிளிநொச்சி பூநகரி, கிராஞ்சி மொட்டையன், உருத்திரபுரம் சிவன் ஆலயம், வவுனியாவில் நாமல்புரம் எனும் கிராமம், குமுழமுனை ஆண்டான் குளம், கன்னியா வெந்நீர் ஊற்று,  என  நாட்டின் எந்த பகுதியிலும் இல்லாதவாறு வடக்கு கிழக்கில் மட்டும் தமிழ் மக்களின்  காணிகளை  அபகரிக்கும் செயல் திட்டத்தை சிறீலங்கா அரசு திட்டமிட்டு செயல்படுத்தி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version