இந்தியாவில் வரும் 16 முதல்  கொரோனா தடுப்பூசி திட்டம் ஆரம்பம்

கொரோனா பெருந்தொற்றுக்கான தடுப்பூசி ஜனவரி 16 முதல் இந்தியாவில் வழங்கப்படவுள்ளது.

முதலில் மூன்று கோடி சுகாதார பணியாளர்களுக்கும் முன் கள பணியாளர்களுக்கும் முன்னுரிமை அடிப்படையில், தடுப்பூசி போடப்படும் என்று முன்னதாக இந்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் அறிவித்திருந்தது.

மேலும் அடுத்த கட்டமாக, 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 50 வயதுக்கு உட்பட்டவர்களில் இணை நோய்கள் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என்று  இந்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் அத்தகையவர்களின் எண்ணிக்கை 27 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

பரிந்துரைக்கப்பட்ட நெறிமுறையின்படி முதலில் இது மருத்துவர்கள், செவிலியர்கள், துணை மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்களுக்கு வழங்கப்படும். இவர்களின் எண்ணிக்கை சுமார் 80 லட்சத்திலிருந்து ஒரு கோடி வரை இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

அடுத்த கட்டமாக சுமார் இரண்டு கோடி முன்களப் பணியாளர்களுக்கு, அதாவது, மாநில காவல் துறையினர், துணை ராணுவ படையினர், ராணுவத்தினர், துப்புரவு தொழிலாளர்கள் ஆகியோருக்கு தடுப்பூசி செலுத்தப்படும்.

தடுப்பூசி போடும் பணியில் ஈடுபடவுள்ள சுமார் நான்கரை லட்சம் பணியாளர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாக அரசு கூறுகிறது.

பாரத் பயோடெக் தனது கோவேக்சின் தடுப்பூசி மருந்தை 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு, அவசரகால பயன்பாட்டுக்காக போட அனுமதி பெற்றுள்ளது.

மேலும், இந்தத் தடுப்பு மருந்தை, 18 வயதிற்கு உட்பட்ட இளைஞர்களுக்கு மருத்துவ பரிசோதனை அடிப்படையில் செலுத்தவும் இந்திய மருந்துகள் தலைமை கட்டுப்பாட்டாளரின் ஒப்புதல் கிடைத்துள்ளது.

இந்தத் தடுப்பூசி வழங்கப்படும் குழந்தைகள், தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்படுவர்.

கோவிட்-19 சிகிச்சைக்காக இரண்டு தடுப்பு மருந்துகளை அவசரகாலத்திற்குப் பயன்படுத்த இந்தியாவில் உள்ள மருந்துகள் தலைமை கட்டுப்பாட்டாளர் (டி.சி.ஜி.ஐ) அனுமதித்துள்ளார்.

கோவிஷீல்ட் மற்றும் கோவேக்சின் ஆகியவையே அவை.

கோவிஷீல்ட் ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராசெனிகாவின் இந்தியப் பதிப்பாக இருந்தாலும், கோவேக்சின், முற்றிலும் இந்தியாவின் சொந்த தயாரிப்பாகும். இது ‘சுதேச தடுப்பூசி’ என்று அழைக்கப்படுகிறது.

கோவிஷீல்ட் இந்தியாவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது. கோவேக்சின் பாரத் பயோடெக் நிறுவனமும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்)-ம் இணைந்து தயாரிக்கும் மருந்தாகும்.

நன்றி பிபிசி