Tamil News
Home செய்திகள் நிரபராதியென நீரூபிக்கும் வாய்ப்பு மறுக்கப்படுவது அநீதி- தொடரும் அரசியல் கைதியின் போராட்டம்

நிரபராதியென நீரூபிக்கும் வாய்ப்பு மறுக்கப்படுவது அநீதி- தொடரும் அரசியல் கைதியின் போராட்டம்

மேன்முறையீட்டு வழக்குகள் இரண்டிலும் துரித விசாரணை சாத்தியமில்லையாயின், பிணை அனுமதி பெற ஆவண செய்து தருமாறு கோரி புதிய மகசின் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதியான இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பணிப்பாளர் சபை உறுப்பினர் கனகசபை தேவதாசன்  கடந்த  06.01.2021 அன்று முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

இவருடைய உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால் அவரது கோரிக்கையை நிறைவேற்ற உரிய தரப்பு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனது உறவுகளிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளதாக அவரின் உறவுகள் ‘குரலற்றவரின் குரல்’ அமைப்புக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

அரசியல் கைதியான கனகசபை தேவதாசன் தனது உறவுகளுக்கு தெரியப்படுத்திய விபரத்தில், “மேல் நீதிமன்ற வழக்குகளின் முறையே 20 ஆண்டுகள் மற்றும் ஆயுள் தண்டனை தீர்ப்பை எதிர்த்து என்னால் மேன்முறையீட்டு நீதிமன்றில் தொடுக்கப்பட்ட இரண்டு வழக்குகளிலும் எனக்காக வாதாட அனுமதி பெற்றேன்.

ஒரு வழக்கு கடந்த 4 ஆண்டுகளாகவும் மற்றைய வழக்கு கடந்த இரண்டு  ஆண்டுகளாகவும் விசாரணைக்கு எடுக்காமல் தவணையிடப்படுகிறது. கொரோனா வைரஸ் பரவலால் தற்பொழுது 2 வழக்குகளும் முற்றாக முடங்கி விட்டன. சிங்களம் தெரியாத சிறைக்கைதியாக நான் உள்ளதால் அதிக சிரமத்தை சந்திக்கவேண்டியுள்ளது. என் அடிப்படை உரிமை மீறப்படுகிறது.

மேலும் கடந்த பல மாதங்களாக உடல் நோயால் அவாதிப்படுகிறேன் கழுத்துப்புண், வலது கை மற்றும் கால் விறைப்பும் நடுக்கமும் இருக்கிறது. மேலதிக சிகிச்சை இன்றி சிறைக்குள் உள்ளேன்.

மேன்முறையீட்டு வழக்குகள் இரண்டிலும் துரித விசாரணை சாத்தியமில்லையாயின், நான் பிணை அனுமதி பெற ஆவண செய்து தருமாறு கோரி கடந்த  06.01.2021 முதல் (நீராகாரம் மட்டும் அருந்தி) உண்ணாவிரதம் ஆரம்பித்துள்ளேன்.

மேல் நீதிமன்ற வழக்குகளில் விசாரணையை விரைவாக முடிவுக்கு கொண்டுவந்ததை போலவே என்னால் தொடுக்கப்பட்ட மேன் முறையீட்டு வழக்குகளையும் விரைந்து முடிவுக்கு கொண்டுவர விரும்பியே எனக்காக நான் வாதாட விண்ணப்பித்தேன் தமிழில் சமர்ப்பணம் செய்வும் விவாதிக்கவும் அனுமதி தரப்பட்டது.

CA283|17 இல. மேன்முறையீட்டு வழக்கில் என் சமர்ப்பணத்தை 3 பக்கங்களில் தமிழில் கையளித்தேன் அதனை இன்னமும் மொழிபெயர்ப்பு செய்யவில்லை எனக் காரணம் காட்டியபடி மன்று தவணையிட்டு வந்தது இதனால் சட்டமா அதிபர் தரப்பின் சமர்ப்பணம் இன்னும் கோரப்படவில்லை. விவாதத்துக்கும் திகதியிடப்படவில்லை CA 413|18இல. வழக்கில் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக எதுவும் நடைபெறவில்லை.

இந் நிலையில் கடந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டில் இருந்து கொரோனா தொற்று காரணமாக மேற்படி இரண்டு வழக்குகளும் முடங்கி விட்டன. சிறையில் இருக்கும் என் சமுகமின்றியே தவணைத்திகதி இடுவது மட்மே தொடர்சியாக இடம்பெறுகிறது. இது மேலும் இப்படியே தொடருமாயின் இந்த இரண்டு வழக்குகளும் தள்ளுபடியாகும் அபாயமும் நிலவுகிறது.

அரசியல் யாப்பில் உத்தரவாதமளிக்கப்பட்ட மொழியுரிமை மற்றும் அடிப்படை உரிமையை என் விடயத்தில் மேன்முறையீட்டு நீதிமன்று அப்பட்டமாக மீறுகிறது. இது தொடர்பில் மன்றுக்கு பல கடிதங்களும் ஜனாதிபதிக்கு ஒரு கடிதம் எழுதியும் பலனளிக்கவில்லை இதனால் நான் மிகவும் பாதிக்கப்படுகிறேன்.

இவை தவிரவும் உடல் நோய்க்கு மேலதிக சிக்கிச்சை இன்றியும் அவதிப்படுகிறேன். கொரோன தொற்று எப்பொழுது முடிவுக்கு வரும் என்பது யாருக்கும் தெரியாத நிலையில் சட்ட நடவடிக்கையின்றி சிறை இருப்பதில் எவ்வித அர்த்தமும் இல்லை எனவே வேறு வழி இன்றி பிணை அனுமதி கோரி கடந்த  06.01.2021 முதல் உண்ணாவிரதம் இருக்கிறேன்.

நிரபராதியென நீரூபிக்கும் வாய்ப்பு எனக்கு மறுக்கப்படுவது அநீதி.  சட்டத்தை அமுல்படுத்துமாறு அரசிடம் கோருவது தவறா, கொரோன அபாயத்தின் மத்தியில் உண்ணாவிரதம் இருந்து நானாகவே என் நோய் எதிர்ப்புசக்தியை இழந்து வருகிறேன் எனக்கு எவரதும் அனுதாபமோ வாக்குறுதியோ வேண்டாம் நீதி மட்டுமே வேண்டும் என தனது உறவுகளிடம் தெரிவித்துள்ளார்.

Exit mobile version