Tamil News
Home செய்திகள் நான், தனது வரைபுக்கு இணக்கம் தெரிவித்ததாக சுமந்திரன் கூறியது முழுப் பொய் – க.வி.விக்னேஸ்வரன்

நான், தனது வரைபுக்கு இணக்கம் தெரிவித்ததாக சுமந்திரன் கூறியது முழுப் பொய் – க.வி.விக்னேஸ்வரன்

நான், தனது வரைபுக்கு இணக்கம் தெரிவித்ததாக சுமந்திரன் கூறியது முழுப் பொய் என நாடாளுமன்ற உறுப்பினரும் நீதியரசருமான க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினரும் நீதியரசருமான க.வி.விக்னேஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“ஐ. நா மனித உரிமைகள் சபை கூட்டத் தொடர் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தான் தயாரித்து என்னால் நிராகரிக்கப்பட்ட வரைபுக்கு நான் தற்போது அனுமதி அளித்துள்ளதாக வவுனியாவில் செய்தியாளர்கள் மத்தியில் கூறி இருப்பதாக ஊடகங்களில் படித்தேன். சுமந்திரனின் இந்த கூற்றில் எந்த உண்மையும் இல்லை.

இது அப்பட்டமான பொய். இந்த வரைபை தான் தயாரிக்கவில்லை என்றும் வேறு யாரோ தான் தயாரித்துள்ளார்கள் என்பதை அறிந்ததும் நான் இணக்கம் தெரிவித்துள்ளதாக வேடிக்கையான கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

குற்றம் உள்ள நெஞ்சு குறுகுறுக்கும் என்பது போல இந்த கடித விவகாரம் தொடர்பில் சுமந்திரன் தெரிவித்துவரும் கருத்துக்கள் முன்னுக்குப் பின் முரணாக அமைகின்றன. சுமந்திரன் எனது பார்வைக்காக எனக்கு அனுப்பிய கடிதத்தை தான் வரையவில்லை என்றும் புலம்பெயர் அமைப்பு ஒன்றே வரைந்ததாகவும் கூறிவருகிறார். எது உண்மை எது பொய் என்பது எனக்கு தெரியாது. ஆனால், இந்த கடித்தை எனக்குத் தந்தது சுமந்திரனே.

எனக்கு இந்த வரைபைத் தந்த சுமந்திரன் அதனைத் தயாரித்தது வேறு யாரோ என்று எதுவும் குறிப்பிட்டதாக எனக்கு ஞாபகமில்லை. ‘நாங்கள்’ என்ற பதத்தைப் பாவித்ததாகவே எனக்கு நினைவு.

இந்த வரைபை படித்து பார்க்கின்ற எவருக்குமே இந்த வரைபின் நோக்கம் அரசாங்கத்துக்கு மனித உரிமைகள் சபையில் முன்னைய தீர்மானத்தினை நிறைவேற்றுவதற்கு மேலும் காலம் வழங்குவதே என்பது புலன் ஆகும். இதில் எந்த மயக்கமும் இருக்க முடியாது.

சுமந்திரன் எனக்கு அனுப்பிய வரைபை நான் பகிரங்கப்படுத்தவில்லை. அதற்கு நான் அளித்த பதிலையே பகிரங்கப்படுத்தினேன். இவ்வாறு நான் பகிரங்கப் படுத்தியதனால் தான் அவரது கபடத்தனமான முயற்சி முறியடிக்கப்பட்டது.

நான் என் பதிலைப் பகிரங்கப்படுத்தியமை காரணமாக அரசாங்கம் நாம் என்ன செய்கின்றோம் என்று விழித்துக்கொண்டு விட்டது என்று நகைப்புக்கிடமான கருத்துக்களைக் கூறி வருகிறார். உண்மையில் சுமந்திரனின் வரைபு அரசாங்கத்தைக் காப்பாற்றும் ஒரு முயற்சி. இதில் அரசாங்கம் கோபப்பட என்ன இருக்கிறது என்று எனக்கு விளங்கவில்லை.

சுமந்திரனின் கருத்துடன் உடன்பட மறுத்து பெரும்பான்மையான புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் கூட்டாக ஒரு வரைபை தயாரித்து அனுப்பி இருந்தார்கள். அந்த வரைபில் சர்வதேச நீதிமன்றம் (நேரடியாக குறிப்பிடப்படாவிட்டாலும்), நீதிக்கான சர்வதேச நீதிமன்றம் (ஐவெநசயெவழையெட ஊழரசவ ழக துரளவiஉந), சர்வதேச சுயாதீன விசாரணை போன்ற அடிப்படையான விடயங்கள் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளன.

இந்த வரைபுக்கு நான் இணக்கம் தெரிவித்துள்ளேனே தவிர சுமந்திரனின் வரைபுக்கு அல்ல. அதேவேளை, மனித உரிமைகள் சபை ஆணையாளர் மற்றும் சபையின் உறுப்பு நாடுகளுக்கு அனுப்பும் பொருட்டு மிகவும் இறுக்கமான ஒரு வரைபை தயாரித்து ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களிடம் இணக்கம் பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன்.

இதேவேளை, வவுனியாவில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் சுமந்திரன், கஜேந்திரகுமார் ஆகியோர் மனித உரிமைகள் சபை தொடர்பிலான பொதுவான வரைபு ஒன்றை தயாரிப்பதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அறிகின்றேன். இது நல்ல விடயம். மூன்று கட்சிகளுக்கும் இடையே இது தொடர்பில் இணக்கப்பாடு ஏற்படுவதற்கு என்னால் ஆன ஒத்துழைப்பை வழங்குவேன். குறித்த வரைபு எது என்று இதுவரையில் தெரியாது.

ஆனால், அடிப்படை விடயங்களில் விட்டுக்கொடுப்பதற்கு நான் தயார் இல்லை. சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், நீதிக்கான சர்வதேச நீதிமன்றம் ஆகியவை சாத்தியம் இல்லை போன்ற கருத்துக்களை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். இவை சாத்தியமோ சாத்தியம் இல்லையோ பாதிக்கப்பட்ட சமூகம் என்ற வகையில் கிடைக்கின்ற எல்லா வழிகளையும் நாம் முயற்சிக்க வேண்டும். சரிவராதுவிட்டால் பரவாயில்லை.

வெற்றி தோல்விகள் என்னைப் பொதுவாகப் பாதிப்பதில்லை. ஆனால், இவற்றுக்காக முயற்சிப்பது சர்வதேச ரீதியில் நீதிக்கான எமது போராட்டத்தை மேலும் முன்னெடுத்து செல்வதற்கு வலுவான ஒரு அடித்தளத்தை ஏற்படுத்தித் தரும் என்பது எனது நம்பிக்கை. அதேவேளை, நாம் கடும்போக்கு நிலையில் நின்றால், ஐ. நா மனித உரிமைகள் சபையின் பிடியில் இருந்து இலங்கை விடுபட்டுபோகும் என்ற அர்த்தம் அற்ற கருத்துக்களையும் நான் நிராகரிக்கின்றேன். நாம் கேட்பது எதுவுமே கடும்போக்கு அல்ல.

அவை நீதியின் பாற்பட்ட நியாயமான கோரிக்கைகளே.  இறுதியாக, சுமந்திரன் பொய் கூறுவதை நிறுத்த வேண்டும் என்று அவரிடம் கோரிக்கை விடுக்கின்றேன். மூன்று நாட்களுக்கு முன்னர்தான் வுஏ யில் அவருக்கும் எனக்கும் இடையில் எந்தவித தனிப்பட்ட பிரச்சினை எதுவும் இல்லை என்றேன். அவருக்கு எனக்கெதிராக ஏதேனும் பிரச்சினை இருந்தால் அதைச் சொல்லட்டும். அதை விட்டு விட்டு பொய் கூற விழையக் கூடாது.

சுமந்திரன் தனது திறமைகளைத் தமிழ் மக்களின் நன்மைகளுக்காக பயன்படுத்தாமல், அரசாங்கங்களின் நன்மைகளுக்காக பயன்படுத்தி வருவதே எனக்கும் அவருக்கும் இடையிலான முரண்பாடுகளுக்கு காரணமாகும். விரைவில் அவர் இந்த நிலைமையில் இருந்து விடுபட்டு, தனது சொந்த மக்களுக்கு நடைபெற்றது இனப்படுகொலை தான் என்பதை புரிந்துகொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்காக பாடுபடுவதற்கு முன்வருவார் என்று நம்புகிறேன்.

அரசாங்கம் தமிழர்களுக்கான தீர்வை புதிய அரசியல் யாப்பினுடாகத் தரும் என்ற நம்பிக்கையில் தொடர்ந்தும் செயற்படாமல் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேரில் தன்னை ஆதரித்த மக்களுக்காகவும் தமிழ்த் தேசியத்துக்காகவும் உண்மையாக உழைக்க முன்வருமாறு அவரை அன்புடன் வேண்டுகின்றேன்.

Exit mobile version