Tamil News
Home செய்திகள் தமிழினத்தின் விடுதலைக்கு இந்தியாவின் தலையீடு அவசியம் – மாவை சேனாதிராஜா சொல்கிறார்

தமிழினத்தின் விடுதலைக்கு இந்தியாவின் தலையீடு அவசியம் – மாவை சேனாதிராஜா சொல்கிறார்

தமிழினத்தின் விடுதலைக்கு, தமிழ்த் தேசத்தின் பாதுகாப்புக்கு இந்தியாவின் தலையீடு அவசியம் என்ற அடிப்படையில் அவர்கள் அக்கறையைச் செலுத்தியுள்ளதை நாங்கள் உணர்ந்திருக்கின்றோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு;

“கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் அரசியல், இராஜதந்திர நகர்வுகள் மிகத் தீவிரமாக இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. சீனாவின் தலையீடுகள், அதற்கு எதிரான நாடுகளின் தலையீடுகள், இந்தியாவின் உரித்து, இந்தப் பிரதேசத்தின் பாதுகாப்பில் தங்கியுள்ளது என்பதில் அவர்கள் அக்கறையாகவுள்ளனர்.

இலங்கையின் பாதுகாப்பு, குறிப்பாக தமிழ்ப் பிரதேசங்களின் பாதுகாப்பு, இந்தியாவின் பாதுகாப்புக்கு மிகமுக்கியமானதாக இருக்கும். இருக்கின்றது என்றெல்லாம் அவர்கள் கருதுவதால், கூடிய அக்கறை செலுத்துவதாக செய்திகள் மூலம் அறியமுடிகிறது.

ஆனபடியால், இந்தியாவின் தலையீடு இனத்தின் விடுதலைக்காகவும் தமிழ் மக்களுடைய, தமிழ்த் தேசத்தின் பாதுகாப்புக்காக, அவர்களுடைய அக்கறையைச் செலுத்தியுள்ளதை நாங்கள் உணர்ந்திருக்கின்றோம். ஏற்கனவே அவ்வாறு பல விடயங்களைப் பேசக்கூடியதாக இருந்திருக்கிறது. அப்படி மறுபடியும் ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் பட்சத்தில் இந்திய அரசுடன் பேச்சுக்களில் ஈடுபட விரும்புகின்றோம்.

அது இந்திய அரசாங்கத்தின் ஒரு தேவைப்பாடாகவும், எங்களுக்கு அதிக தேவைப்பாடாகவும், ஒரு நிகழ்ச்சி நிரலாகவும் இருக்கிறது. எனவே, அவ்வாறான பேச்சு இடம்பெற வேண்டும் என நாங்களும் விரும்புகின்றோம்” என்றார்.

Exit mobile version