Home உலகச் செய்திகள் கொரோனா வைரஸ் நெருக்கடியை ஆவணப்பதிவு செய்த இத்தாலிய செவிலியர்-“தனிமையில் இறப்பது என்பது கொடுமை”

கொரோனா வைரஸ் நெருக்கடியை ஆவணப்பதிவு செய்த இத்தாலிய செவிலியர்-“தனிமையில் இறப்பது என்பது கொடுமை”

”எல்லோரும் எங்களை ஹீரோ என்கிறார்கள், ஆனால் எங்களுக்கு அப்படி தோன்றவில்லை “, என்கிறார் பாலோ மிரண்டா.

இத்தாலி நாட்டில் உள்ள கிரெமொனா நகரில் உள்ள மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் செவிலியராக இருக்கிறார் பாலோ மிரண்டா. இத்தாலியை பொறுத்தவரை லம்போர்டி பகுதியில் உள்ள சிறய நகரம்தான் கொரோனா தொற்றின் மையப்பகுதியாகும். அங்கு 2,167 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 199 பேர் உயிரிழந்துள்ளனர்.

மற்ற செவிலியர்களைப் போல் கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து 12 மணி நேரம் உழைக்கிறார் பாலோ.

”நாங்கள் அனைவரும் செவிலியர் சேவையில் இருக்கிறோம். ஆனால் நாங்களும் அவ்வப்போது சோர்வாக உணர்கிறோம். ஆனால் இப்போது ஏதோ பாதாளத்தில் இருப்பது போல் உள்ளது. எங்களுக்கும் அச்சமாக இருக்கிறது” என்கிறார் அவர்.

புகைப்படங்கள் எடுக்க அதீத ஆர்வம் கொண்ட பாலோ, இந்த இக்கட்டான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் சூழலை புகைப்படங்கள் எடுத்து அதை ஆவணம் செய்ய அவர் முடிவெடுத்தார்.111360629 8 கொரோனா வைரஸ் நெருக்கடியை ஆவணப்பதிவு செய்த இத்தாலிய செவிலியர்-"தனிமையில் இறப்பது என்பது கொடுமை"

”என்ன நடக்கிறது என்பதை நான் மறக்க விரும்பவில்லை. இது நாளைய வரலாறு. வார்த்தைகளை விட புகைப்படங்களே வலுவானதாக இருக்கும் என நான் நினைக்கிறேன்” எனக் கூறுகிறார் பாலோ.

இந்த புகைப்படங்களில் அவர் தன் சக ஊழியர்களின் பலத்தையும் பலவீனத்தையும் காட்ட விரும்புகிறார்.

”ஒரு நாள் என்னுடைய சக ஊழியர் ஒருவர் மருத்துவமனையின் நடை பாதையில் குதித்து கொண்டும் கத்தி கொண்டும் வந்தார். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, அதில் அவருக்கு நோய் தொற்று இல்லை என முடிவானதுதான் அதற்கு காரணம். பொதுவாக அவர் மிகவும் அமைதியானவர். ஆனால் மிகுந்த அச்சத்தில் இருந்த அவரால் தனக்கு கொரோனா இல்லை என்ற செய்தியை கேட்டதும் அந்த நிம்மதியை கட்டுபடுத்த முடியவில்லை. அவரும் சாதாரண மனிதர் தானே”, என்றார் பாலோ.”

இது பாலோவுக்கும் அவருடைய குழுவுக்கும் மிகவும் சோதனைக்குரிய காலம். ஆனாலும் குழுவில் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டு ஒரு பிணைப்போடு உள்ளார்கள்.

”சில நேரங்களில் எங்களில் சிலர் சோர்வடைவோம், வெருப்புக்குள்ளாவோம், பயனில்லாதவர்கள் போல நினைப்போம். அழுவோம். ஏனென்றால் நாங்கள் கவனித்து கொள்ளும் சில நோயாளிகளிடம் எந்த முன்னேற்றமும் இருக்காது” என்று பாலோ தெரிவிக்கிறார்.

ஆனால் அப்படி சோர்வாக இருக்கும் செவிலியரை, மற்ற செவிலியர்கள் பார்த்துக்கொள்வோம். அந்த நேரத்தில் நாங்கள் அவருக்கு ஆதரவாக இருப்போம். ஏதாவது நகைச்சுவை செய்து அவரை சிரிக்க வைப்போம். இல்லையென்றால் நாங்கள் எங்களை இழந்துவிடுவோம் என்கிறார் பாலோ.

இதுவரை இத்தாலியில் நான்கு வாரத்தில் சுமார் 3000 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

35,000 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நேரத்தில் நாட்டில் உள்ள மருத்துவர்களும் செவிலியர்களும் கடினமான நிலையை எதிர்கொள்கின்றனர். குறிப்பாக வடக்கு பகுதியில் இருப்பவர்கள் பெரிதும் சிக்கலுக்கு ஆளாகின்றனர்.

பாலோ செவிலியர் 9 ஆண்டுகளாக இருக்கிறார். மக்கள் உயிரிழப்பதை அவர் பார்த்துள்ளார். ஆனால் இந்த நேரத்தில் இவ்வளவு மக்கள் யாருமே உடன் இல்லாமல் இறப்பது அவருக்கு வருத்தத்தை ஏற்படுத்துகிறது.

“தீவிர சிகிச்சை பிரிவில் உயிரிழக்கும்போது பொதுவாக அந்த நோயாளியை சுற்றி அவர்களது உறவினர்கள் இருப்பார்கள். அவர்களுக்கு நாங்கள் ஆதரவாக ஏதாவது பேசுவோம். இது நாங்கள் வழக்கமாக செய்வதில் ஒன்று”

ஒருவர் உயிரிழக்கும் நிலையில் இருந்தால், அவரை பார்க்க உறவினர்களும் நண்பர்களும் அங்கு அனுமதிக்கப்படுவர். ஆனால் கொரோனா தொற்று பரவக் கூடாது என்பதற்காக குடும்பங்கள் மற்றும் நண்பர்கள் மருத்துமனையில் அனுமதிக்கப்படுவதில்லை. அவர்களால் மருத்துவமனைக்கு கூட வர முடியாது.

“பொதுவாக அனைவரையும் விட்டு தன்னை தனிமைப்படுத்தி கொண்டவர்களுகே நாங்கள் சிகிச்சை செய்கிறோம். தனிமையில் இறப்பது என்பது மோசமான விஷயம். யாருக்கும் அது நடக்கக்கூடாது”, என்கிறார் பாலோ.

கிரெமொனா மருத்துவமனை இப்போது கொரோனா வைரஸ் மருத்துவமனையாக மாறிவிட்டது. இப்போது மற்ற சிகிச்சைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டு, சுமார் 600 கொரோனா தொற்று நோயாளிகளுக்கு மட்டுமே அங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

மேலும் புதிய நோயாளிகள் வந்த வண்ணம் இருப்பதால், இந்த மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் படுக்கைகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

“மருத்துவமனையின் எல்லா மூலைகளிலும் தற்போது நாங்கள் படுக்கைகளை போடுகிறோம். மருத்துவமனையில் கூட்டம் அந்தளவிற்கு அதிகமாகி விட்டது” என்கிறார் பாலோ.

மருத்துவமனையின் நுழைவாயில் வெளியே தற்காலிகமாக கள மருத்துவமனை ஒன்றை கட்டுகிறார்கள். அதில் 60 படுக்கைகள் இருக்கும். ஆனால், அதுவும் போதாது.

நன்றி-பிபிசி தமிழ்

Exit mobile version