Tamil News
Home செய்திகள் காணாமல் போனவர்கள் படுகொலை செய்யப்பட்டனர் என்ற கோத்தபயாவின் அறிவிப்பிற்கு சீமான் கண்டனம்

காணாமல் போனவர்கள் படுகொலை செய்யப்பட்டனர் என்ற கோத்தபயாவின் அறிவிப்பிற்கு சீமான் கண்டனம்

ஈழப் போரில் 20,000 தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டு விட்டனர் என்பதற்கான ஒப்புதல் வாக்குமூலமே இலங்கை அதிபர் கோத்தபயா ராஜபக்ஸவின், காணாமல் ஆக்கப்பட்டோர் இறந்து விட்டனர் என்கிற அறிவிப்பு என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு

இறுதிக்கட்ட ஈழப்போரில் காணாமல் போனவர்கள் இறந்து போய்விட்டார்கள் என இலங்கை அதிபர் கோத்தபயா ராஜபக்ஸ அறிவித்திருப்பதானது பேரதிர்ச்சியைத் தருகின்றது. இது உலகம் முழுக்கப் பரவி வாழும் தமிழர்களிடையே பெரும் உள்ளக் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது.

கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக இறுதிக்கட்டப் போரில் காணாமல் போன தமிழ் மக்களையும், சரணடைந்த போராளிகளையும் விடுதலை செய்யக்கோரி அவர்களது குடும்பத்தாரும், உறவினர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் போராடி வருகிற சூழலில் இலங்கை அதிபரின் உலகத்தார் உள்ளங்களில் இடியென இறங்கியிருக்கிறது. இறுதிக் கட்டப் போரில் காணாமல் போனவர்களின் நிலை குறித்தறிய ஐ.நா. பெருமன்றம் வரை சென்று ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகமும் போராடி வருகின்ற நிலையில், இது குறித்து வாய்திறக்காது கள்ளமௌனம் சாதித்து வந்த இலங்கை இனவாத அரசு, தற்போது அவர்கள் இறந்து விட்டதாக அறிவித்திருப்பதன் மூலம் ஈழத்தில் தாங்கள் நடத்திய இனப்படுகொலையை மீண்டுமொரு முறை ஒப்புக் கொண்டிருக்கின்றது.

ஈழ நிலத்தில் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கணவனை இழந்து நிற்கிறார்கள். பல்லாயிரக் கணக்கான பெண்கள் பாலியல் வன்புணர்ச்சிக்குள்ளாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள். பெண்கள், முதியவர்கள், குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள், செவிலியர்கள், பத்திரிகையாளர்கள் என எவ்வித பேதமும் இல்லாது தமிழர்கள் சிங்கள அரசின் கொத்துக் குண்டுகளால் கொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள். போர் விதிகளும், மரபுகளும் முற்றுமுழுதாகத் தகர்க்கப்பட்டு, தமிழர்கள் இன அழிப்பிற்கு உள்ளாக்கப்பட்டு, இரண்டு இலட்சத்திற்கும் மேலான தமிழர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். இலங்கையை ஆண்ட சிங்கள இனவெறி அரசின் திட்டமிட்ட இனப்படுகொலையால் ஈழப் பெருநிலம் பெரும் அழிவைச் சந்தித்து உலகெங்கும் அகதியாக அலைகிற இழிநிலைக்குத் தமிழ்த் தேசிய இன மக்கள் தள்ளப்பட்டு நிற்கிறார்கள்.

கடந்த 2009 மே மாதம் நிகழ்ந்த போரின் இறுதிக்கட்டத்தில் 59 குழந்தைகள் உள்ளிட்ட பல நூறு பேர் வெள்ளைக்கொடி ஏந்தி சரணடைந்தார்கள். அதற்கு முந்தைய, பிந்தைய காலகட்டங்களில் விசாரணை எனவும், புலிகள் இயக்கத்திற்குத் தொடர்புடையவர்கள் எனவும் பல்லாயிரக் கணக்கான தமிழ் இளைஞர்களைச் சிங்கள இனவாத அரசு கைது செய்து பிடித்துச் சென்றது. எந்தவிதமான நீதி நெறிமுறைகளும், சனநாயக வழிகளும் பின்பற்றப்படாமல் பிடித்துச் செல்லப்பட்ட பல்லாயிரக் கணக்கான தமிழின மக்கள் குறித்து எவ்விதத் தகவலும் கிடைக்காத சூழலில் தங்களது சகோதர, சகோதரிகளை இழந்தவர்கள், கணவனை இழந்தவர்கள், மகன்களை, மகள்களை இழந்தவர்கள் எனச் சிங்கள அரசினால் பிடித்துச் செல்லப்பட்ட தமிழின இளைஞர்களைப் பறிகொடுத்த உறவுகள் கண்ணீர் மல்க வீதிகளில் இறங்கிப் போராடி வந்தார்கள்.

கடந்த சில வருடத்திற்கு முன்பாக, இலங்கைக்குச் சென்ற இங்கிலாந்து நாட்டு பிரதமர் டேவிட் கமரூனுக்கு முன்பாகக்கூட தமிழின சொந்தங்கள் காணாமல் போன தங்களது உறவுகளின் புகைப்படத்தை ஏந்திக் கொண்டு கதறி அழுத சம்பவங்களும் நடந்தன. இச்சூழலில் அவர்கள் மொத்தமாக இறந்து விட்டதாக அலட்சியப் போக்கு அறிவித்து அதனை மிக எளிதாகக் கடந்து செல்ல முற்படும் இலங்கை அரசின் செயல் வன்மையான கண்டனத்திற்குரியது. காணாமல் போனவர்கள் இறந்து விட்டார்கள் என அறிவித்திருக்கும் கோத்தபயா ராஜபக்ஸ, இத்தனை காலம் கழித்துத் தாமதமாகச் சொல்லியிருப்பதன் உள்நோக்க அரசியலை உலகத் தமிழ்ச் சமூகம் கேள்வி எழுப்புகின்றது.

காணாமல் போன அத்தனையாயிரம் தமிழர்கள் எவ்வாறு இறந்தார்கள்? யாரால் இறந்தார்கள்? அவர்களது உடல்கள் எங்கே? அவர்களது உடல்கள் உடற்கூறாய்வு செய்யப்பட்டதா? என்கின்ற கேள்விகளுக்கு சிங்கள அதிபர் பதில் சொல்லியே ஆகவேண்டும். நினைத்தாலே நெஞ்சம் பதறித் துடிக்கக் கூடிய 20ஆயிரம் தமிழர்களது உயிரிழப்பைத் துச்சமாய் நினைத்துப் போகின்ற போக்கில் கருத்துத் தெரிவித்திருக்கும் சிங்கள அதிபர் கோத்தபயாவின் நடவடிக்கை எதனாலும் ஏற்றுக் கொள்ளவே முடியாத அரசபயங்கரவாதமாகும்.

காணாமல் போன தங்களது உறவுகளைக் கேட்டு நெஞ்சம் முழுக்கத் தவிப்போடும், நித்தமும் கண்ணீர் பெருக்கோடும் கடந்த பத்தாண்டுகளாக ஈழத்து வீதிகளில் இரவு பகல் எனப் பாராது, மழை, வெயிலைப் பொருட்படுத்தாது போராடி வந்திருக்கிறார்கள். அவர்களது இறுதி நம்பிக்கையை மொத்தமாகச் சிதைத்திருக்கிறது கோத்தபயாவின் இந்த அறிவிப்பு. இருபதாயிரம் தமிழின மக்களைத் துடிக்கத் துடிக்கக் கொலை செய்து அதை அறிவித்தும் முடித்திருக்கிற சிங்கள அரசோடு, இனி தமிழர்கள் எவ்வாறு இணைந்து வாழ்வார்கள் என்கின்ற கேள்வியைச் சர்வதேச சமூகத்தின் மனசாட்சியிடம் தமிழர்கள் நாங்கள் அறச்சீற்றத்தோடும், உள்ளக் குமுறலோடும் எழுப்புகிறோம்.

இதன் பிறகும்கூட, இந்தியப் பெருநாடும், சர்வதேச சமூகமும் எங்களுக்கான நீதியைப் பெற்றுத் தராமல் மௌனம் சாதிக்குமானால் வரலாற்றுப் பெரும் பழியைச் சுமக்க நேரிடும். எத்தனை காலங்கள் கடந்தாலும் இனி தமிழனாகப் பிறக்கக்கூடிய ஒவ்வொருவரின் மனதிலும், சிங்கள இனவாத அரசினால் படுகொலை செய்யப்பட்ட தமிழின இளைஞர்களின் இழப்பு பெரும் காயமாகத் தேங்கியிருக்கும். மாபெரும் வலியை தமிழினத்திற்கு அளித்த சிங்கள அரசு இந்தப் பூமிப் பந்து முழுக்கப் பரந்து வாழ்கின்ற 12கோடி தமிழ்த் தேசிய இனத்தின் நெஞ்சினுள்ளும் ஆறா வன்மத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.

இந்திய பெருநிலப்பரப்பில் 8கோடி தமிழர்கள் வாக்குச் செலுத்தி, வரி செலுத்தி இந்திய நாட்டின் விடுதலை முதற்கொண்டு அனைத்திலும் பங்கெடுத்து நாட்டின் இறையாண்மையை மதித்துச் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு இந்த நாட்டின் குடிமக்களாகக் காலங்காலமாக வாழ்ந்து வருகின்றோம். இருபதாயிரம் தமிழர்களைக் கொன்று குவித்ததை ஒப்புக் கொண்டு வாக்குமூலம் வழங்கி இருக்கிற இன்றைய அறிவிப்பு அத்தகைய தாயகத் தமிழர்கள் மத்தியில் பெரும் துயரத்தையும், வலிமையையும் ஏற்படத்தியிருக்கின்றது.

ஆகவே மத்திய அரசு தமிழர்களது உணர்வினையும், போராட்டத்தினையும் மதித்து இலங்கையுடனான உறவை முறித்துக் கொண்டு தனது வெளியுறவுக் கொள்கையை மாற்றியமைக்க வேண்டுமெனவும், சிங்கள அரசு செய்யத் திட்டமிட்ட தமிழினப் படுகொலையைப் பன்னாட்டு நீதி விசாரணைக்கு உட்படுத்த சர்வதேச அழுத்தம் தரவேண்டுமெனவும், சிங்கள அரசு செய்யத் திட்டமிட்ட தமிழினப் படுகொலையைப் பன்னாட்டு நீதி விசாரணைக்கு உட்படுத்த சர்வதேச அழுத்தம் தரவேண்டுமெனவும், பொது வாக்கெடுப்பை ஈழத் தமிழ்ச் சொந்தங்களிடம் நடத்தி தனித் தமிழீழம் அமைவதற்கான முன்னெடுப்பினை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றேன். இதனைச் செய்யத் தவறும் பட்சத்தில், இந்தியக் குடிமகன் எனும் உணர்வே அற்றுப் போய் தீரா வன்மமும், ஆறா கோபமும் தமிழ் இளைய தலைமுறைப் பிள்ளைகளின் நெஞ்சிலே தங்கி அது பெரும் பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடுமென எச்சரிக்கிறேன். என்று சீமான் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version