Home செய்திகள் ஆசிரியர் இடமாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வீதிக்கு இறங்கி மாணவர்கள் போராட்டம்!

ஆசிரியர் இடமாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வீதிக்கு இறங்கி மாணவர்கள் போராட்டம்!

திருகோணமலை – காவல்துறை பிரதேசத்தில் உள்ள பாடசாலையொன்றில் ஆசிரியரொருவரின் இடமாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

காவல்துறை பிரதேசத்திற்குட்பட்ட சரஸ்வதி வித்தியாலயத்தில் ஆசிரியராக கடமையாற்றிய கணிதப்பாட ஆசிரியரொருவர் இடமாற்றம் செய்யப்பட்டதை கண்டித்தே குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கணிதப் பாட ஆசிரியரின் இடமாற்றத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டுமென வலியுறுத்தி “வேண்டும் வேண்டும் கணித பாட ஆசிரியர் வேண்டும்” என மாணவர்கள் கோஷங்களை எழுப்பியவாறு, பாடசாலையின் பிரதான முன் கதவை அடைத்து வீதியில் அமர்ந்த வண்ணம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் காரணமாக குறித்த பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதுடன், வாகன போக்குவரத்துக்களிலும் தடையேற்பட்டுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பியந்த பத்திரண, பாடசாலைப் பழைய மாணவர்கள், பெற்றோர்கள், பாடசாலை அபிவிருத்திக்குழு நிர்வாக உறுப்பினர்கள் எனப் பலர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில் பொலிஸார் ஆர்ப்பாட்டத்தை கலைக்க முற்பட்ட போதும், ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து செல்லாமல் சுமார் 3 மணித்தியாலயங்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து கல்வித் திணைக்கள அதிகாரிகள் வருகை தந்து குறித்த ஆசிரியரின் இடமாற்றத்தினை இரத்து செய்வதாகவும், தொடர்ந்தும் அதே பாடசாலையில் கடமையினை பொறுப்பேற்குமாறு அறிவித்த நிலையில் ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டுள்ளது.aa 1 ஆசிரியர் இடமாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வீதிக்கு இறங்கி மாணவர்கள் போராட்டம்!

Exit mobile version