Home ஆய்வுகள் சிங்கள குடியேற்றங்களால் சின்னாபின்னமாகும் வவுனியா வடக்கு- கோ.ரூபகாந்

சிங்கள குடியேற்றங்களால் சின்னாபின்னமாகும் வவுனியா வடக்கு- கோ.ரூபகாந்

வடக்கின் வாசலாகவுள்ள வவுனியா மாவட்டம் தற்போதைய நிலையில் 83 வீத தமிழர்களையும் 7 வீத முஸ்லீம்களையும் 10 வீதம் சிங்கள மக்களையும் கொண்டமைந்ததாக காணப்படுகிறது.அந்தவகையில் மாவட்டத்தின் குடிப்பரம்பலை மாற்றியமைக்கும் திட்டமிட்ட சிங்களகுடியேற்ற செயற்பாடுகளை ஆட்சிக்கு வருகின்ற ஒவ்வொரு அரசாங்கமும் செவ்வனே செய்து வருகின்றன.

போரிற்கு பின்னரான காலப்பகுதியில் முன்னாள் ஐனாதிபதி மகிந்த ராயபக்சவின் மேற்பார்வையில் மேற்கொள்ளப்பட்ட பரந்தளவிலான குடியேற்றங்கள் வவுனியா மாவட்டத்தின் எதிர்கால குடிப்பரம்பலை தீர்மானிக்கும் நிலைமையை தோற்றுவித்துள்ளமை மறுக்கமுடியாததாக உள்ளது.

அதனை தொடரும் விதமான செயற்பாடுகளை நல்லாட்சி அரசும் மேற்கொண்டு வருகின்றமை தமிழர்களை பொறுத்தவரை ஏமாற்றமே. வவுனியா நகரின் சில பகுதிகளில் 20 வருடங்களிற்கு முன்னரான காலப்பகுதியில் குடியேற்றப்பட்ட சிங்கள மக்கள் கணிசமாக இருக்கும் நிலையில் 2009 தொடக்கம் 2015 இற்கு இடைபட்ட காலப்பகுதியில் பரந்தளவிலான குடியேற்றங்களால் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பகுதியாக வவுனியா வடக்கு காணப்படுகிறது.

வவுனியா வடக்கும் குடியேற்றமும்

வவுனியா மாவட்டத்தின் நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளில் வவுனியா வடக்கும் ஒன்று.அதன் மைய பிரதேசமாக நெடுங்கேணி நகர் பகுதி அமைந்துள்ளது.2009 ற்கு முன்னர் விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த குறித்த பகுதி போர் முடிவடைந்த பின்னரான காலப்பகுதியில் பல பௌதிக,சமூகரீதியான,மாற்றங்களை சந்தித்த வண்ணம் இருக்கிறது.தமிழர்களின் பூர்விக நிலமான இப்பிரதேசம் இன்று அதன் தனித்துவ தன்மையை இழந்து நிற்கிறது.காரணம் சிங்கள குடியேற்றங்கள் வவுனியா வடக்கின், கிழக்கு பகுதி முல்லைத்தீவு திருகோணமலை ,அனுராதபுரம்,போன்ற பகுதிகளோடு சங்கமிக்கும் அடர்ந்த பெருங்காடுகளை கொண்டமைந்துள்ளது.அதனால் அங்கு குடியேற்றங்களும் மிக இலகுவாக நடைபெற்று விடுகிறது.

நெடுங்கேணி நகரிலிருந்து கிழக்கு புறமாக 20 கிலோமீட்டர் தொலைதூரத்தில் காணப்படுகின்ற அடர்ந்த வனாந்தரப்பகுதியில் பரவலாக குடியேற்றங்கள் செய்யப்பட்டும்,இனிமேல் செய்யப்படுவதற்கும் தயாராகி இருக்கும் நிலைமையை பார்க்க கூடியதாக உள்ளது.

மருதோடை கிராமத்திலிருந்து நீண்டு செல்கின்ற வீதி இரு பக்கமும் வானளவு உயர்ந்த மரங்களை நிரப்பிய பெருங்காடுகளாக உள்ளதுடன் மனிதர்கள் வசிப்பதற்கு உரிய நிலை அங்கு இரண்டாம் பட்சமாகவே காணப்படுகிறது.ஆனால் அப்பகுதியில் பல ஆயிரம் ஏக்கர் காடுகள் அளிக்கப்பட்டு சிங்கள மக்கள் குடியமர்த்த பட்டிருக்கிறார்கள்.

1983 ம் ஆண்டு குடியேற்றப்பட்ட மக்களும் அப்பகுதியில் வசிப்பதுடன், மகாவலி எல் வலயத்திற்குள் வருகின்ற “ நிகவௌ,சபுமல்தன்ன”,போன்ற கிராமங்களில் 2014 ம் ஆண்டளவில் 200 குடும்பங்கள் குடியமர்த்தப் பட்டுள்ளனர்.குறித்த கிராமத்தில் இருந்து வெலிஓயா பிரதேசம் 5 கிலோமீட்டர் தொலைவில் காணப்படுகிறது.அங்கு குடியேற்றப்பட்ட மக்கள் அனுராத புரத்தை சொந்த இடமாக கொண்டுள்ளதுடன் குடியேற்றப்பட்ட பின்னர் பலருக்கு வீடுகள் வழங்கப்பட்டு,வீதிகள் அமைக்கப்பட்டு,யானை வேலி அமைக்கப்பட்டு சகலவசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

இங்கு பிரச்னை என்னவென்றால் குறித்த கிராமம் உட்பட முல்லைத்தீவு மாவட்டத்திற்குள் வருகின்ற வெலிஓயா,அதனை அண்டிய பகுதியான சம்பத்நுவர போன்ற பகுதிகளிற்கான வாக்காளர் பட்டியல்கள் வவுனியா வடக்கு பிரதேச சபை வாக்காளர்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.இம்முறை தேர்தலிலும் அவர்கள் வவுனியா வடக்கு பிரதேச சபைக்கே தமது வாக்கை அளித்துள்ளனர்.ஆனால் அவர்களுடைய பிரதேச செயலக பிரிவாக வெலிஓயா காணப்படுகிறது. அது முல்லை தீவு மாவட்திற்கு உரித்தானது.

அத்துடன் அவர்களிற்கான வாக்காளர் அட்டை வவுனியா மாவட்டத்திற்குள் வருவதுடன் மின்சார தேவைகளுக்காக அனுராதபுரம் நோக்கியும் செல்கின்றனர். இது நிர்வாக ரீதியாக பல பிரச்னைகளை ஏற்படுத்தி வருகிறது.

கடந்த உளூராட்சி தேர்தலில்

இம்முறை நடைபெற்ற உள்ளூராட்சி சபை தேர்தலில் கூட சிங்கள மக்கள் வசிக்கும் 17 கிராமங்கள் இணைக்கப்பட்டு 4 வட்டாரங்களாக பிரிக்கப்பட்டிருந்தது.அந்த 17 கிராமங்களில் அதிகமாக வாக்குகளை கொண்ட சிங்கள கிராமமான போகஸ்வௌ உடன் தமிழ் மக்களின் எல்லை கிராமங்களான வெடிவைத்தகல்,கோவில் புளியங்குளம்,ஊஞ்சல்கட்டி போன்றவை இணைந்து ஒரு வட்டாரமாக உருவாக்கப்பட்டது.

போகஸ்வௌ கிராமத்தில் 350 வாக்குகள் இருப்பதுடன் குறித்த மூன்று தமிழ் கிராமங்களிலும் 175 வாக்குகளே இருக்கின்றன இதனால் இம்முறை நடைபெற்ற தேர்தலில் இந்த வட்டாரத்தில் சிங்கள பிரதிநிதி ஒருவரே வெற்றி பெற்றுள்ளார்,அவர் முன்னாள் ஜனாதிபதி மகிந்தவின் கட்சியை சார்ந்தவராகவும் இருக்கிறார்.அவர் தமிழ் கிராமங்களிற்கு சேவை செய்வார் என்பதை எதிர்பார்க்க முடியுமா?

அத்துடன் இணைக்கப்பட்டுள்ள இந்த சிங்கள கிராமத்திற்கும், தமிழ் கிராமத்திற்கும் இடைபட்ட பகுதி 10 கிலோமீட்டருக்கும் அதிகமான பெரும்காடுகளை கொண்டமைந்திருக்கிறது.இந்நிலையில் இந்த இணைப்பு எவ்வாறு சாத்தியம் என்று எண்ண தோன்றுகிறது. எனவே போரால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுடைய எல்லை கிராமங்கள் அபிவிருத்தியை எதிர்பார்த்து நிற்கையில் அது தொடர்பில் சிந்திக்காமலேயே குறித்த எல்லை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதுடன்,இது திட்டமிட்டு செய்யப்பட்ட காரியமாகவே பார்க்கப்படுகிறது.

அழிந்துவரும் தமிழர் கிராமங்கள்

போர்ச்சூழல் காரணமாக ஏற்பட்ட அழிவு, இடப்பெயர்வு,போரிற்கு பின்னர் முறையாக மேற்கொள்ளப்படாத,மீள்குடியேற்ற செயற்பாடுகள் காரணமாக வவுனியா வடக்கில் உள்ள எல்லையோர கிராமங்கள் மக்கள் இல்லாமல் அழிந்து வரும் நிலையை சந்திக்கின்றன.அதிலும் குறிப்பாக வெடிவைத்தகல் ,கோவிலபுளியங்குளம்,ஊஞ்சல்கட்டி போன்றவை மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதுடன்,மண்ணின் மைந்தர்களின் வரவுக்காக ஏங்கி நிற்பதை பார்க்க கூடியதாக இருக்கிறது.

40 ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வந்த வெடிவைத்தகல் கிராமத்தில் தற்போது ஒரேயொரு முதியவர் மட்டும் வாழ்ந்து வருகிறார்,அதுபோல கோவில்புளியங்குளம் பகுதியில் 6 குடும்பங்கள் வாழ்கின்றன.இப்பகுதியில் உள்ள இரு பாடசாலைகள் புதர்வளர்ந்து மாணவர்களின் வருகைக்காக ஏங்கி நிற்கிறது.குளங்களும்,வயல் ,நிலங்களும் அதிகம் காணப்பட்டாலும் அவற்றை பயன்படுத்த மக்கள் இல்லை என்பது,பெரும் குறையாக உள்ளது.vanni north2 சிங்கள குடியேற்றங்களால் சின்னாபின்னமாகும் வவுனியா வடக்கு- கோ.ரூபகாந்

உலகமயமாதல் போர்ச்சூழல் நகரத்தை நோக்கிய மனிதர்களின் பயணம் கிராமங்களை சோபையிழக்க செய்திருக்கிறது.எது எப்படியோ போர்ச்சூழல் காரணமாக சோபையிழந்து நிற்கும் கிராமங்களும்,மனிதர்கள் நடமாடாத வீதிகளும்,பாழடைந்த வீடுகளும் போர் அழிவுகளையும் மக்களின் முன்னைய இருப்பையும் தாங்கி நிற்கின்றன. இவ்வாறான நிலைமை எதிர்காலத்தில் சிங்களகுடியேற்றங்கள் அமைக்கப்படுவதற்கு இலகுவாக அமைந்து விடுகிறது.

மகாவலி திட்டம்

மகாவலி திட்டத்தின் மூலமே குறித்த குடியேற்ற திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மொரகாகந்த நீர்த்தேக்கத்தில் இருந்து மகாவலி நீரை வவுனியா சேமமடுக்குளத்திற்குள் கொண்டுவருவதற்கான செயற்திட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த வகையில் ஆறாயிரம் சிங்கள குடும்பங்களை மகாவலி திட்டத்தின் மூலம் வெலிஓயா,சம்பத்நுவரவை அண்டிய பகுதிகளில் குடியேற்றுவது என்றும்,சம்பத்நுவர பிரதேசத்தை முல்லைத்தீவு போல நகர் சார்ந்த பிரதேசமாக மாற்றி அமைப்பதுடன்,நெடுங்கேணி பகுதி கிராம மையமாக இருக்கும் என்றும் மகாவலி அதிகார சபையின் “எல்” வலயத்திற்கான கருதிட்ட வரைபடத்தில் காணப்படுகிறது.

இது தொடர்பாக வவுனியாவை சேர்ந்த மாகாணசபை உறுப்பினர்களான ப.சத்தியலிங்கம்,ரி.லிங்கநாதன் ஆகியோர் பலதடவை சுட்டி காட்டி உள்ளார்கள்.வடபகுதிக்கு மகாவலி நீர் வர வேண்டிய தேவை கட்டாயம் இருக்கின்றது.ஆனால் நீர் வந்து சேருவதற்கு முன்னர் சிங்கள குடியேற்றங்கள் வந்துவிட்டவைதான் மிகப்பெரும் சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது.

குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படும் பொழுது அந்தந்த மாவட்டங்களில் உள்ள மக்களிற்கு அல்லது மாகாணத்தில் உள்ள மக்களிற்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.13 ம்திருத்த சட்டத்திலும் அது தொடர்பாக தெளிவாக கூறப்பட்டுள்ளது.இங்குள்ள மக்களிற்கு காணிகள் தேவைப்படும் நிலையில் அதனை கருத்தில் கொள்ளாது வெளிமாகாணங்களை சேர்ந்த மக்களை குடியேற்றுவதானது அரசினுடைய பேரினவாத மனோபாவத்தை வெளிக்காட்டி நிற்பதுடன்,நிலங்களை அபகரித்து விட்டால் தமிழ் மக்களுடைய சுயநிர்ணய உரிமைக்கான போராட்டங்களை நசுக்கி விடலாம் என்ற கபட நோக்கத்தையும் கொண்டுள்ளது.2009 உடன் ஆயுத போர் நிறைவுற்று அது நில ஆக்கிரமிப்பு போராக மிளிர்ந்துள்ளது.

அதெற்கெதிராக மக்களும்,மக்களை பிரதிநிதித்துவ படுத்துபவர்களும் போராடாவிட்டால் எதிர்காலத்தில் வடக்குமாகாணத்திற்குள் சிங்கள மாவட்டம் ஒன்று இணைந்து கொள்ளும் நிலைமையை தவிர்க்கமுடியாது என்பதே நிதர்சனம்.

Exit mobile version