Tamil News
Home செய்திகள் தஞ்சாவூர் ஓவியத்தின் மூலம் கோத்தபயாவிற்கு மோடி விளக்கிய செய்தி

தஞ்சாவூர் ஓவியத்தின் மூலம் கோத்தபயாவிற்கு மோடி விளக்கிய செய்தி

கோத்தபயா ராஜபக்ஸவின் இந்திய விஜயத்தின் போது, டில்லி, ஐதரபாத் இல்லத்தில், இந்தியப் பிரதமர் மோடியும், கோத்தபயாவும் மேற்கொண்ட சந்தித்துப் பேசினர். அப்போது, இலங்கையில் இராவணனுக்கு எதிராக, ராமர் போர் புரியும் தஞ்சாவூர் ஓவியத்தை கோத்தபயா ராஜபக்ஸவிற் காட்டினார்.

இதன் மூலம் நாட்டின் வலிமையையும், இந்து மதத்தின் பெருமையையும், தன் ஆளுமையையும் பிரதமர் மோடி பறைசாற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

டில்லியில் உள்ள ஐதரபாத் இல்லத்தில், சர்வதேச தலைவர்கள், அதிபர்களை சந்தித்து பேசுவதை பிரதமர் மோடி வழக்கமாக வைத்துள்ளார். ஐதரபாத் இல்லத்திற்கு கோத்தபயா வருவதற்கு முன், அந்த இல்லம் பிரதமர் மோடியின் பாதுகாப்பு அதிகாரியின் மேற்பார்வையில் புதுப்பிக்கப்பட்டது. ஐதரபாத் இல்லத்தில், இரு நாடுகளின் தலைவர்கள் அமர்ந்து பேசும் அறையில், பிரபல ஓவியர் ரவிவர்மா அல்லது வடமாநில ஓவியர் வரைந்த ஓவியம் மாட்டப்பட்டிருக்கும். கோத்தபயா வருவதற்கு முன், அங்கு ராமர் பட்டாபிசேகம் காணும் ஓவியம் மாட்டப்பட்டிருந்தது. திடீரென அந்த ஓவியத்தை பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள் எடுக்க உத்தரவிட்டனர்.

ஆனால், பிரதமர் மோடியின் உத்தரவின்படி, ராமர், சீதை, இராவணன், அநுமர் போன்றவர்களின் படங்களும், இலங்கையை தீக்கிரையாக்கிய காட்சியும் அந்த ஓவியத்தில் இடம்பெற்றிருந்தது. இந்த ஒரு ஓவியத்தின் வாயிலாக, இந்தியாவின் வலிமையையும், இந்து மதத்தின் பெருமையையும், கோத்தபயா ராஜபக்ஸவிற்கு, பிரதமர் மோடி மறைமுகமாக சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபயா வெற்றி பெற்றதும், இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். அவருக்கு இந்திய மத்திய அரசு செங்கம்பள வரவேற்பு அளித்தது. அதே சமயத்தில் அவரது வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் டில்லியில் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.

மேலும் பாதுகாப்பு விவகாரத்தில், இராணுவ ரீதியாகவும் இலங்கையுடன் இந்தியா இணைந்து செயற்படுவது என்றும், இலங்கை பொருளாதாரத்தைப் பலப்படுத்த இந்தியா 2,870 கோடி ரூபாய் கடன் வழங்குவது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது. இது குறித்து பா.ஜ.க வட்டாரங்கள் கூறும் போது, கோத்தபயா ராஜபக்ஸ வெற்றி பெற்றதும் பிரதமர் மோடி தனது வாழ்த்துக்களை தமிழில் ருவிற்றர் பதிவிட்டுள்ளார். அதேபோல் கோத்தபயா இந்தியாவிற்கு வந்த போதும், தமிழில் ருவிற்றர் பதிவிட்டு வரவேற்றார்.

சீனாவிடம் நெருக்கம் காட்ட வேண்டாம் என கோத்தபயா ராஜபக்ஸவிடம் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். அதற்கு, கோத்தபயா ராஜபக்ஸ, சீனாவிடம் கடன் பெற்றுள்ளோம். அந்தக் கடனை அடைக்க, நீங்கள் உதவ வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். இலங்கை வாழ் தமிழர்களுக்கும், தமிழக மீனவர்களுக்கும் கோத்தபயா ராஜபக்ஸ ஆட்சியில் பாதிப்பு ஏற்படக்கூடாது. அப்படி பாதிப்பு ஏற்பட்டால் நான் சும்மா இருக்க மாட்டேன் என்பதை சுட்டிக்காட்டுவதற்குத் தான் இலங்கையில் இராவணனுக்கு எதிராக ராமர் போர் புரியும் ஓவியத்தை மாட்டி வைத்துள்ளார். அதனால் தான், இந்தியப் பிரதமர்களில் இந்திராவை அடுத்து, மோடியை தான் ஆளுமை மிக்க தலைவராக பார்க்கிறேன் என தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலிடம் கோத்தபயா ராஜபக்ஸ பாராட்டிப் பேசியிருக்கின்றார். இவ்வாறு கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

Exit mobile version