உணவுக்காக குழந்தைகளை விற்கும் நிலைக்கு ஆப்கானிஸ்தான் மக்கள் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அந் நாடு மிகத் தீவிரமான மனிதநேயப் பிரச்சினைகளை சந்தித்து வருகிறது என ஐ.நா.வின் உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது.
ஐ.நா.வின் உலக உணவுத் திட்டத்தின் தலைவர் டேவிட் பீஸ்லி பிபிசி செய்தி சேவைக்கு அளித்த பேட்டியில், “ இந்த பூமியில் மிகவும் மோசமான மனிதநேயப் பிரச்சினைகளை ஆப்கானிஸ்தான் சந்தித்து வருகிறது.
ஆப்கானிஸ்தானில் வாழும் மக்களில் 95 சதவீத மக்களுக்கு போதுமான உணவு இல்லை. 2.30 கோடி மக்கள் பட்டினியின் பிடியில் சிக்கித் தவிக்கிறார்கள்.
நினைத்துப் பாருங்கள், உணவில்லாமல் உங்கள் பேரன் பேத்திகள், குழந்தைகள் மரணத்தை எதிர்கொண்டால் உங்களால் முடிந்தததை அனைத்தையும் செய்வீர்கள்தானே. உலகளவில் நம்மிடம் 400 இலட்சம் கோடி டாலர் சொத்து இருந்தும் என்ன பயன். நமக்கு வெட்கமாக இருக்கிறது.
ஆப்கானிஸ்தான் சமீபத்தில் நடந்த அரசியல் மாற்றங்களால் அங்குமக்கள் மிக மோசமான அளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். உலக நாடுகள் மனிதநேய உதவிகளை தொடர்ந்து வழங்கிட வேண்டும்” என்றார்.
அடுத்துவரக்கூடிய குளிர்காலத்தில் உலக நாடுகள் தலையிட்டு உதவாவிட்டால் ஆப்கன் மக்கள் இப்போது சந்திக்கும் பட்டினி, உணவுப் பற்றாக்குறையைவிட இன்னும் மோசமான சிக்கல்களை சந்திப்பார்கள், பேரழிவுக்கு செல்லும் என ஐ.நா மேலும் வேதனை தெரிவித்துள்ளது.