இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயற்சித்த 91 பேர் கைது

புத்தளம் – மாரவில பகுதியிலிருந்து கடல் மார்க்கமாக சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டுக்கு செல்ல முயற்சித்த 91 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாரவில கடலோர பிரதேசத்தில் நேற்றைய தினம் நடத்தப்பட்ட விசேட சுற்றி வளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது. இந்த சந்தேகநபர்கள் இருவேறு சந்தர்ப்பங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றிரவு நடத்தப்பட்ட சுற்றி வளைப்பில் 9 முதல் 58 வயதுக்கு இடைப்பட்ட 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.அத்துடன், கடற்படைக்கு சொந்தமான விரைவு படகுகளின் ஊடாக நடத்தப்பட்ட விசேட சுற்றி வளைப்பில் படகொன்றில் பயணித்துக்கொண்டிருந்த 76 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 58 ஆண்களும், 5 பெண்களும், 7 சிறார்களும், ஆட்கடத்தலுடன் தொடர்புடைய 7 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஒன்று முதல் 62 வயதுக்குட்பட்ட 76 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம், திருகோணமலை, முல்லைத்தீவு, நீர்கொழும்பு, புத்தளம், சிலாபம், கல்பிட்டி, கிளிநொச்சி, புத்தளம், மற்றும் மாரவில ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.  கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை கடற்படையினர், சட்ட நடவடிக்கைகளுக்காக  காவல்துறையில் ஒப்படைத்துள்ளனர்.

Tamil News