இலங்கையில் இருந்து மேலும் 8 பேர் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம்

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியினால், யாழ்பாணம் மாவட்டத்தை சேர்ந்த மேலும் 8 பேர்  தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியினால் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளன. பொருட்களின் தட்டுபாடு காரணமாக இலங்கையில் இருந்து  தமிழர்கள் தனுஸ்கோடி கடல் வழியாக தமிழகத்தில் தஞ்சமடைந்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று இரவு யாழ்பாணம் மாவட்டம் வல்வெட்டித்துறையை சேர்ந்த சேர்ந்த சசிகலா, கதிர், கமலா ராணி உள்ளிட்ட 8 பேர் படகு மூலம் தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.

“சமீப காலமாக வடக்கு மாகாண பகுதியில் பள்ளிக்கு செல்லும் சிறுமிகள் கடத்தி, கொலை செய்யப்படுகிறார்கள். சிறுமிகளை கடத்தும் கும்பல் ஒன்று யாழ்பாணத்தில் உள்ளதாக தகவல் வெளியானதையடுத்து, பாதுகாப்பு தேடி இலங்கை பணம் ஒருவருக்கு தல ஒரு இலட்சம் ரூபாய் கொடுத்து படகில் தமிழ்நாட்டிற்கு வந்ததாக” சசிகலா என்பவர் சர்வதேச ஊடகமான பிபிசி தமிழிடம் தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் 22ம் திகதி முதல் இன்று வரை இலங்கையில் இருந்து 103  தமிழர்கள் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.