இலங்கையில் மின் கட்டணம் 75% அதிகரிப்பு- பெரும் நெருக்கடிக்குள் மக்களின் வாழ்க்கை

இலங்கையில் இன்று முதல் மின்சார கட்டணத்தை 75 சதவிகிதம் அதிகரிக்க பொது பயன்பாடுகள் ஆணைக்குழு, இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி, இன்று முதல் மின்சார கட்டணம் 75 சதவிகிதம் அதிகரிக்கப்படுகின்றது என பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்தார்.

இலங்கையில் மின்சார கட்டண திருத்தம் சுமார் 9 வருடங்களில் பின்னர் இவ்வாறு மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

2014ம் ஆண்டு 25 சதவிகித மின்சார கட்டண குறைப்பு மேற்கொள்ளப்பட்ட நிலையில், தற்போது 75 வீதத்தால் அது அதிகரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

0 முதல் 30 அலகுகளுக்கு (யூனிட்) மாதம் ஒன்றிற்கு 198 ரூபா செலுத்த வேண்டிய நிலைமை ஏற்படும்.

31 முதல் 60 வரையான அலகுகளுக்கு மாதமொன்றிற்கு 599 ரூபாவும், 61 முதல் 90 வரையான அலகுகளுக்கு 1,467 ரூபாவும் செலுத்த வேண்டும்.

மேலும், 91 முதல் 120 வரையான அலகுகள் பயன்படுத்தப்படும் பட்சத்தில், 2,976 ரூபாவும், 121 முதல் 180 வரையான அலகுகள் பயன்படுத்தப்படும் பட்சத்தில் 5,005 ரூபாவும் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 30 வரையான அலகுகளுக்கு இதுவரை காணப்பட்ட 2 ரூபா 50 சதமாக காணப்பட்ட கட்டணமானது, தற்போது 8 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

 31 முதல் 60 வரையான அலகுகளில், ஒரு அலகுக்கு இதுவரை 4 ரூபா 85 சதமாக காணப்பட்ட கட்டணமானது, தற்போது 10 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும், 61 முதல் 90 அலகுகளுக்கு இடையில், ஒரு அலகுக்கு காணப்பட்ட 7 ரூபா 85 சதமான கட்டணம், தற்போது 16 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

91 முதல் 180 வரையான அலகுகளில், ஒரு அலகுக்கு இதுவரை 27 ரூபா காணப்பட்ட நிலையில், அது தற்போது 50 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.