75 வாக்குகளை அளித்தாராம் ; சிறிதரனுக்கு எதிராக தேர்தல் செயலகத்தில் முறைப்பாடு

75 வாக்குகளை ஒரே நாளில் கள்ளமாக அளித்தேன் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்த கருத்துக்கு எதிராக யாழ். மாவட்ட செயலகத்தில் உள்ள தேர்தல்கள் தொடர்பான முறைப்பாட்டுப் பிரிவில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்துப்பட்டுள்ளது.

யாழ். தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளரான சட்டத்தரணி ஸ்ரனிஸ்லஸ் செலஸ்ரின் என்பவராலே இந்த முறைப்பாடு நேற்றுப் புதன்கிழமை பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னார் தனியார் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் தாம் 2004ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் 75 வாக்குகளை ஒரே நாளில் அளித்தார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கூறியிருந்தார்.

அது தொடர்பில் விசாரணை நடத்தப்படவேண்டும் என்று யாழ். மாவட்டத் தேர்தல்கள் தொடர்பான முறைப்பாட்டுப் பிரிவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டமை தொடர்பில் முறைப்பாட்டு செய்யப்பட்டதற்கான அத்தாட்சியுடன் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்குச் சென்ற சட்டத்தரணி ஸ்ரனிஸ்லஸ் செலஸ்ரின் முறைப்பாடு தொடர்பில் பொலிஸாருக்குத் தெரியப்படுத்தினார்.