7 தமிழர் விடுதலை தொடர்பாக விரைவில் முதல்வர் நல்ல முடிவை அறிவிப்பார் – அமைச்சர் ரகுபதி

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 29 ஆண்டு காலம் சிறைவாசம் அனுபவித்து வரும் 7 தமிழர் விடுதலை தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் ஆலோசனை நடத்தி நல்ல முடிவை அறிவிப்பார் என்று தமிழக சட்ட அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 29 ஆண்டுகளுக்கும் மேலாக சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் சிறைவாசம் அனுபவித்து வருகிறார்கள்.

இவர்கள் 7 பேரையும் தமிழக அரசே சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றி விடுதலை செய்யலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து முந்தைய அதிமுக அரசு இந்த எழுவர் விடுதலை குறித்து தமிழக சட்ட சபையில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் ஆளுநர் தமிழக அரசின் தீர்மானத்தை நிராகரித்து விட்டார். எழுவர் விடுதலையில் முடிவெடுக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்குத் தான் உண்டு என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்து விட்டார்.

எழுவர் விடுதலை குறித்து திமுக உள்ளிட்ட கட்சிகள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறன. இந்த நிலையில் ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றவுடன் எழுவர் விடுதலை குறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்தனர்.

சென்னையில் நேற்று(11)  இரவு முதல்வர் மு.க.ஸ்டாலின் இல்லத்தில் சட்ட அமைச்சர் ரகுபதி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரமும் பங்கேற்றார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் சட்ட அமைச்சர் ரகுபதி பேசும் போது, ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் 29 ஆண்டுகள் சிறையில் இருக்கும் 7 தமிழரை விடுதலை செய்ய வேண்டும் என்பது தான் எங்கள் குறிக்கோள். இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் ஆலோசனை நடத்தி நல்ல முடிவை அறிவிப்பார் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.